நாகர்கோவிலில் பரபரப்பு தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் வெளியேற முயற்சி அதிகாரிகள் சமரசம்


நாகர்கோவிலில் பரபரப்பு தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் வெளியேற முயற்சி அதிகாரிகள் சமரசம்
x
தினத்தந்தி 21 May 2020 2:07 AM GMT (Updated: 21 May 2020 2:07 AM GMT)

நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் வெளியேற முயன்றனர். அவர்களிடம் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் வெளியேற முயன்றனர். அவர்களிடம் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தடை விதிக்கப்பட்ட பகுதி

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 26 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். 21 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். ஒரு முதியவர் சிகிச்சை பலன் இன்றி இறந்து விட்டார். ஒரு பெண் சென்னையிலும், ஒரு குழந்தை திருவனந்தபுரத்திலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியவர்களில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் கேசவ திருப்பாபுரம் சந்தோஷ்நகர் பகுதியைச் சேர்ந்த வாலிபரும் ஒருவர். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதும் சந்தோஷ்நகர் பகுதி முழுமையாக சீல் வைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

திடீர் போராட்டம்

இதனால் அந்த பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். வெளியில் இருந்து யாரும் அந்த பகுதிக்குள் செல்ல முடியவில்லை.

இதற்கிடையே கொரோனா தொற்று நோயாளியும் வீடு திரும்பி விட்டதால், தங்கள் பகுதியில் உள்ள தடையை உடனடியாக அகற்ற வேண்டும், தாங்கள் பழைய நிலைக்கு திரும்ப தடையை நீக்குங்கள் என்பதை வலியுறுத்தி நேற்று அந்த பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்த பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர்.

போலீசார் சமரசம்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசாரும் மக்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார், தடையை அகற்றுவது குறித்து மாவட்ட கலெக்டர் தான் முடிவு செய்ய வேண்டும், நாங்களாக எதுவும் செய்ய முடியாது. எனவே கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்று தடையை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறோம். அதுவரை பொறுமையாக இருங்கள் என்று கூறினர்.

பரபரப்பு

அதன் பிறகு அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து, தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story