முக கவசம் அணிவதை வலியுறுத்தி 15 ஆயிரம் கடைகளில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் நாகர்கோவிலில் ஒட்டப்பட்டன


முக கவசம் அணிவதை வலியுறுத்தி 15 ஆயிரம் கடைகளில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் நாகர்கோவிலில் ஒட்டப்பட்டன
x
தினத்தந்தி 21 May 2020 2:15 AM GMT (Updated: 21 May 2020 2:15 AM GMT)

நாகர்கோவிலில் முக கவசம் அணிவதை வலியுறுத்தி 15 ஆயிரம் கடைகளில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் முக கவசம் அணிவதை வலியுறுத்தி 15 ஆயிரம் கடைகளில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

அபராதம்

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதை மீறுபவர்களுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அபராதம் மற்றும் கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

விழிப்புணர்வு சுவரொட்டி

இந்த நிலையில் கடைகள், வணிக நிறுவனங்களுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் முக கவசம், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 15 ஆயிரம் கடைகளில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டும் பணி நேற்று தொடங்கியது.

இதன் தொடக்க நிகழ்ச்சி நாகர்கோவில் மத்தியாஸ் வார்டு சந்திப்பு பகுதியில் நடந்தது. இதனையொட்டி அங்குள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஒட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாநகர நகர்நல அதிகாரி கிங்சால் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வு

இதேபோல செட்டிகுளம் சந்திப்பு, ராமன்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் சுவரொட்டிகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அந்த பகுதிகளில் உள்ள டீக்கடைகள், பிற தனிக்கடைகள் போன்றவற்றில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? வாடிக்கையாளர்களும், கடைகளில் பணியாற்றுபவர்களும் முககவசம் அணிந்துள்ளார்களா? என்பதையும் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார். பின்னர் ஆணையர் சரவணக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் இல்லாத மாநகராட்சியாக நாகர்கோவில் மாற்றப்பட்டுள்ளது. மேலும், சுவரொட்டிகளும் இல்லாமல் உள்ளது. இதையும் மீறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டாலோ, சுவர் விளம்பரங்கள் செய்தாலோ அபராதம் விதிக்கப்படுவதோடு, சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றார்.

Next Story