மைசூரு-பெங்களூரு இடையே இன்று ரெயில்கள் இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி


மைசூரு-பெங்களூரு இடையே இன்று ரெயில்கள் இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 21 May 2020 11:15 PM GMT (Updated: 21 May 2020 9:08 PM GMT)

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக மைசூரு-பெங்களூரு இடையே இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

மைசூரு,

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக மைசூரு-பெங்களூரு இடையே இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அமலில் இருக்கும் 4-வது கட்ட ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், 4-ம் கட்ட ஊரடங்கிற்கு பிறகு, அதாவது அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதியில் இருந்து நாடு முழுவதும் பயணிகள் ரெயிலை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், கர்நாடகத்தில் ரெயில்களை இயக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் கர்நாடகத்தில் 22-ந்தேதி (அதாவது இன்று) முதல் ரெயில்களை இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

அதன்படி, இன்று பெங்களூரு-மைசூரு, பெங்களூரு-உப்பள்ளி-பெலகாவி இடையே ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் மைசூருவில் இருந்து பெங்களூருவுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ரெயில்கள் இயக்கப்படுவதால், மைசூரு ரெயில் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணிகளும், பயணிகள் பரிசோதனை செய்ய வேண்டிய ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

இதுகுறித்து மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், மைசூரு-குடகு தொகுதி பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா நேற்று மைசூருவில் ரெயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மைசூரு ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் மந்திரி ரெயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். அதாவது, ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் சமூக விலகலை கடைபிடிக்கவும், தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் முன்பதிவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மைசூரு ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டரில் பயணிகள் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக பாக்ஸ்கள் போடப்பட்டுள்ளது.

பயணிகள் முக கவசம் அணிவதை வலியுறுத்தும் விதமாக மைசூரு ரெயில் நிலையத்தில் உள்ள சிலைகளுக்கு முக கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் ரெயில் மதியம் 12.45 மணிக்கு மைசூரு ரெயில் நிலையத்தை வந்தடைகிறது. பின்னர் மறுமார்க்கமாக மதியம் 1.45 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 5 மணி அளவில் பெங்களூருவை சென்றடைகிறது. மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், இந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இயங்குகிறது.

இந்த ரெயில், நாகனஹள்ளி, பாண்டவபுரா, மண்டியா, மத்தூர், ராமநகர், கெங்கேரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் முறையாக ரெயில்கள் இயக்கப்படுவதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல, இன்று பெங்களூரு-உப்பள்ளி-பெலகாவி இடையே அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இதனால் உப்பள்ளி, பெலகாவி ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

Next Story