பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து சோனியா காந்தி மீது சிவமொக்கா போலீசில் வழக்குப்பதிவு வாபஸ் பெற முதல்-மந்திரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்


பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து சோனியா காந்தி மீது சிவமொக்கா போலீசில் வழக்குப்பதிவு வாபஸ் பெற முதல்-மந்திரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 May 2020 11:45 PM GMT (Updated: 21 May 2020 9:11 PM GMT)

பிரதமரை விமர்சித்தது தொடர்பாக சிவமொக்கா போலீசார் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரு,

பிரதமரை விமர்சித்தது தொடர்பாக சிவமொக்கா போலீசார் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை வாபஸ் பெற முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

சிவமொக்கா மாவட்டம் சாகர் போலீஸ் நிலையத்தில் கே.வி.பிரவீன்குமார் என்பவர் ஒரு புகாரை அளித்தார். அதில், அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தனது டுவிட்டரில் கொரோனாவுக்கு எதிராக போராட அமைக்கப்பட்ட பிரதமர் கேர் நிதியகத்திற்கு வந்த நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இது பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என்றும், இதுகுறித்து அடிப்படை ஆதாரமற்ற தவறான தகவலை வெளியிட்ட சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த புகாரின் அடிப்படையில் சாகர் போலீசார் சோனியா காந்தி மீது இந்திய தண்டனை சட்டம் 153, 505(1) (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த சட்ட பிரிவுகள், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அல்லது சமுகத்தினருக்கு எதிராக மக்களை தூண்டிவிடுவதை குறிப்பிடுகிறது. சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கர்நாடக காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுபாஷ் அகர்வால் கூறுகையில், “சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். அரசை கேள்வி எழுப்புவது எதிர்க்கட்சியின் கடமை. எதிர்க்கட்சியின் குரலை நெரித்தால், ஜனநாயகம் செத்துவிடும். பிரதமர் நிவாரண நிதி செயல்பட்டில் இருக்கும்போது, பிரதமர் கேர் நிதி என்ற ஒரு பிரிவை தொடங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை காங்கிரஸ் சொல்லி வருகிறது என்றார்.

இது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பாவை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து முறையிட்டார். சோனியா காந்தி மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டார். எடியூரப்பாவிடம் அவர் கொடுத்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் கேர் நிதிக்கு வந்த நிதியை மக்களின் நலனுக்கு செலவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் எங்கள் கட்சியின் தலைவி சோனியா காந்தி, டுவிட்டரில் கருத்தை வெளியிட்டார். துரதிஷ்டவசமாக அவரது கருத்தை பா.ஜனதா தலைமை தவறாக புரிந்து கொண்டுள்ளது. அதனால் அக்கட்சி, பிரவீன்குமார் என்பவருக்கு அழுத்தம் கொடுத்து போலீசில் புகார் கொடுக்க வைத்துள்ளது. போலீசார் உண்மையை விசாரிக்காமல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொது நிதி தவறாக பயன்படுத்துவதாக கருதினால், அதுகுறித்து கேள்வி எழுப்ப ஒரு பெரிய கட்சியின் தலைவியாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவியாக, எம்.பி.யாக இருக்கும் சோனியா காந்திக்கு உரிமை உள்ளது. மோடி எடுத்த நடவடிக்கையால் மக்கள் இறந்துள்ளனர் என்று நாங்கள் போலீசில் புகார் கொடுக்கலாமா?. இந்த அரசியல் சிக்கல்களை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

போலீசார் அதிகரத்தை தவறாக பயன்படுத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர். சோனியா காந்தி மீது போடப்பட்டுள்ள வழக்கை உடனே வாபஸ் பெற வேண்டும், வழக்கை பதிவு செய்த போலீஸ் அதிகாரியை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். மேலும் அந்த அதிகாரி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக் குமார் தெரிவித்துள்ளார்.

Next Story