தொழில் நிறுவனங்கள் எளிதாக நிலம் வாங்க கர்நாடக நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்


தொழில் நிறுவனங்கள் எளிதாக நிலம் வாங்க கர்நாடக நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
x
தினத்தந்தி 21 May 2020 11:00 PM GMT (Updated: 21 May 2020 9:45 PM GMT)

தொழில் நிறுவனங்கள் எளிதாக நிலத்தை வாங்க கர்நாடக நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி எடியூரப்பா, தொழில் துறை அதிகாரிகளுடன் பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் எடியூரப்பா பேசியதாவது:-

“சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளியேறும் தொழில் முதலீட்டாளர்களை கர்நாடகத்திற்கு இழுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் தலைமை செயலாளர் தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு குழுவின் செயல்பாடுகள் குறித்து வாரந்தோறும் கூட்டம் நடத்தி ஆய்வு செய்யப்படும்

ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் முழுமையாக முடக்கப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், 70 சதவீத நிறுவனங்கள் பணியை தொடங்கியுள்ளன. சர்வதேச தொழில் முதலீட்டாளர்களை இழுக்க அவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் நிறுவனங்கள் நிலத்தை வாங்க விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன.

இதனால் தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பது சுலபமாகும். மாவட்ட அளவிலும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க சில சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி கூறியபோது போல், சவால்களை வாய்ப்புகளாக கருதி நாம் பணியாற்ற வேண்டும். இந்த நோக்கத்தில் மாநில அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உடல் பாதுகாப்பு கவச உடை (பி.பி.இ. கிட்) உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக நமது நாட்டில் 22 நிறுவனங்களில் இத்தகைய உடல் பாதுகாப்பு கவச உடைகள் தயாரிக்கப்படுகின்றன. 4 நிறுவனங்கள் செயற்கை சுவாச கருவிகளை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.

கிருமிநாசினி திரவத்தின் பற்றாக்குறையை போக்க கர்நாடகத்தில் 40 நிறுவனங்களுக்கு அந்த திரவத்தை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட மைசூரு மாவட்டம் நஞ்சன்கூட்டில் உள்ள ஜூபிலியண்ட் மருந்து உற்பத்தி நிறுவனத்தை திறக்கவும் அனுமதி வழங்கியுள்ளோம். கர்நாடகத்தில் சமூக பாதுகாப்பு வாரியத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் சுமார் 89 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

இத்தகைய தொழிலாளர் கள் அந்த வாரியத்தில் பதிவு செய்ய அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கட்டிட தொழிலாளர் நல வாரியம் மூலம் இதுவரை 12.40 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.”

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

கூட்டத்தில் தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Next Story