பெண் விவசாயியை தரக்குறைவாக பேசிய மந்திரி மாதுசாமிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை


பெண் விவசாயியை தரக்குறைவாக பேசிய மந்திரி மாதுசாமிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 May 2020 11:45 PM GMT (Updated: 21 May 2020 9:50 PM GMT)

பெண் விவசாயியை தரக்குறைவாக பேசிய மந்திரி மாதுசாமிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு,

சட்டத்துறை மந்திரி மாதுசாமி, கோலாரில் சுற்றுப்பயணம் செய்தபோது, மனு கொடுக்க வந்த பெண் விவசாயி ஒருவரை தரக்குறைவாக பேசியுள்ளார். இதை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கண்டித்துள்ளார். மாதுசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடியூரப்பா, “பெண் விவசாயியை தரக்குறைவாக பேசிய மந்திரி மாதுசாமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளேன். விவசாயிகளை இவ்வாறு பேசுவதை நான் ஏற்க மாட்டேன். இத்தகைய கருத்துகளை சகித்துக்கொள்ள முடியாது. தவறான வார்த்தையை பயன்படுத்தியது அவருக்கு நல்லதல்ல. மந்திரி மாதுசாமி மற்றும் அந்த பெண் விவசாயியை நேரில் அழைத்து பேச முடிவு செய்துள்ளேன்.”

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

முன்னதாக இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “பெண் விவசாயியை மந்திரி மாதுசாமி தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தி உள்ளார். இதை நான் கண்டிக்கிறேன். இதற்கு முதல்-மந்திரி எடியூரப்பா பதில் கூற வேண்டும்” என்றார்.

மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், “மந்திரியாக இருப்பவர்கள் தங்களை மகாராஜாக்கள் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம், கார், வீட்டு வசதியை பெறுகிறார்கள். விதான சவுதா மந்திரிகளுக்கு சொந்தமானது அல்ல. அது மக்களுக்கு சேவை செய்யும் இடம். மந்திரி மாதுசாமியை முதல்-மந்திரி எடியூரப்பா நீக்க வேண்டும்” என்றார்.

ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எச்.டி.ரேவண்ணா கூறும்போது, “மந்திரி மாதுசாமி, பெண் விவசாயியை தரக்குறைவாக பேசி இருப்பதன் மூலம் அவர் பெண் சமூகத்தை அவமதித்துவிட்டார். முதல்-மந்திரி எடியூரப்பா அவரை மந்திரிசபையை விட்டு நீக்க வேண்டும்” என்றார்.

பெண் விவசாயி குறித்து தரக்குறைவாக பேச்சு: மந்திரி மாதுசாமி மன்னிப்பு கேட்டார்


பெண் விவசாயி குறித்து தரக்குறைவாக பேசியதற்காக மந்திரி மாதுசாமி மன்னிப்பு கேட்டுள்ளார்.

சட்டத்துறை மந்திரி மாதுசாமி, கோலாரில் சுற்றுப்பயணம் செய்தபோது, மனு கொடுக்க வந்த பெண் விவசாயியை தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்தது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மந்திரி மாதுசாமிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் மாதுசாமி, தனது செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் துமகூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

“கோலாரில் நான் பேசிய பேச்சு, பெண் விவசாயிக்கு வருத்தம் அளித்திருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முதல்-மந்திரி எடியூரப்பா கூறினால், உடனே பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி என்னிடம் எதுவும் பேசவில்லை.

இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது. அந்த பெண்ணின் பேச்சும் சரியாக இருக்கவில்லை. குரலை உயர்த்தி பேசினார். அதற்கு நான், குரலை உயர்த்தி பேச வேண்டாம் என்று கூறினேன். நான் கூறிய வார்த்தை, தரக்குறைவானது என்று நான் கருதவில்லை. ஒவ்வொரு முறையும் அந்த பெண் விவசாயி, எல்லாரிடமும் அவ்வாறு பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

எனக்கும் சுயமரியாதை உள்ளது. அவர் குரலை உயர்த்தி பேசியபோது, நானும் சற்று கோபமாக பேசியதில் தவறு ஒன்றும் இல்லை.”

இவ்வாறு மாதுசாமி கூறினார்

Next Story