பர்லியார் சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு


பர்லியார் சோதனைச்சாவடியில்   கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்   அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 21 May 2020 10:05 PM GMT (Updated: 21 May 2020 10:05 PM GMT)

பர்லியார் சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சாலைகள் மற்றும் கோவை மாவட்டத்தை இணைக்கும் சாலைகள் இருக்கின்றன. மாவட்ட எல்லைகளில் கக்கநல்லா, நம்பியார்குன்னு, தாளூர், சோலாடி, கக்குண்டி, பூலக்குன்னு, நாடுகாணி, பாட்டவயல், பர்லியார், குஞ்சப்பனை, குண்ணி, மணல்வயல், கோட்டூர் ஆகிய 13 சோதனைச்சாவடிகள் உள்ளன. ஊரடங்கு உத்தரவால் சோதனைச்சாவடிகள் மூடப்பட்டு, போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மாவட்ட எல்லையான பர்லியார் சோதனைச்சாவடியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு வாகன சோதனை நடப்பதை பார்வையிட்டு, கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வளர்ச்சி பணிகள்

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்களில் முறையாக அனுமதி பெற்று வருகிறார்களா, மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்கள் மற்றும் டிரைவர்களின் விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார்.

சோதனைச்சாவடிகளில் கிருமிநாசினி தெளிக்கவும், ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அகழி

எடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அளக்கரை முதல் கோட்டக்கல் வரை ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சாலை, அளக்கரையில் ரூ.12.60 லட்சம் செலவில் பழுது பார்க்கப்பட்ட 6 வீடுகள், பர்லியார் ஊராட்சிக்கு உட்பட்ட கோடமலை முதல் அய்யப்பன் காலனி வரை ரூ.30 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கான்கிரீட் சாலை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கோடமலை தேவி தோட்டம் பகுதியில் ரூ.2 லட்சம் செலவில் அகழி அமைக்கும் பணி, பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாரஸ்டேல் பகுதியில் ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.54.69 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சாலை போன்றவற்றை ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, குன்னூர் தாசில்தார் குப்புராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story