தஞ்சை மாவட்டத்தில் எள் அறுவடை பணிகள் தீவிரம் ஏக்கருக்கு 400 கிலோ வரை மகசூல்


தஞ்சை மாவட்டத்தில் எள் அறுவடை பணிகள் தீவிரம் ஏக்கருக்கு 400 கிலோ வரை மகசூல்
x
தினத்தந்தி 21 May 2020 11:07 PM GMT (Updated: 21 May 2020 11:07 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் எள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏக்கருக்கு 400 கிலோ வரை மகசூல் கிடைத்து வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் எள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏக்கருக்கு 400 கிலோ வரை மகசூல் கிடைத்து வருகிறது.

எள்சாகுபடி

தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு, மக்காச்சோளம், உளுந்து, பச்சைபயறு, பூக்கள், வெள்ளரிக்காய், பரங்கிக்காய், தர்பூசணி, வெற்றிலை போன்றவை சாகுபடி செய்து வருகின்றனர். இது தவிர எள் சாகுபடியும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை செய்த வயல்களில் எள், உளுந்து போன்றவை சாகுபடி செய்வது வழக்கம்.

அதன்படி சாகுபடி செய்யப்பட்ட எள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் ஏக்கர் வரை எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. எண்ணெய் வித்து பயிரான எள் அதிக வெப்பம் நிலவும் கோடைகாலத்தில் வளரக்கூடிய பயிர். மிகவும் குறைவான தண்ணீரை பயன்படுத்தி விளையக்கூடியது என்பதால் தண்ணீர் வசதியில்லாத விவசாயிகளின் தேர்வாக உள்ளது.

அறுவடை பணிகள் தீவிரம்

தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாசி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட எள் தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. அறுவடை செய்யப்படும் எள்ளானது, மிட்டாய், நல்லெண்ணெய் தயாரிக்கவும், சமையலுக்கும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது தஞ்சை, திருக்கானூர்பட்டி, கொல்லாங்கரை, சூரக்கோட்டை, மடிகை, குருங்குளம், ஒரத்தநாடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தஞ்சை வட்டாரத்தில் மட்டும் 1000 ஏக்கர் வரை எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பட்டுக்கோட்டை சாலைகளில் ஆங்காங்கே அறுவடை செய்யப்பட்ட எள்செடிகளை ஆங்காங்கே உலர்த்தி காய வைத்த வண்ணம் உள்ளனர். ஏக்கருக்கு ரூ.400 கிலோ வரை மகசூல் கிடைத்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் எள் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தும் வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகிறார்கள்.

விலை குறைந்தது

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 1 கிலோ எள் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது எள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் விலை குறைந்து தற்போது ஒரு கிலோ சராசரியாக, 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Next Story