மேட்டூர் அணை திறப்புக்கு முன்பாக பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்


மேட்டூர் அணை திறப்புக்கு முன்பாக பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 May 2020 11:40 PM GMT (Updated: 21 May 2020 11:40 PM GMT)

மேட்டூர் அணை திறப்புக்கு முன்பாக பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருவாரூர், 

மேட்டூர் அணை திறப்புக்கு முன்பாக பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்த நிலையில் நேற்று அந்தந்த பகுதி தாசில்தார் அலுவலகங்களில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது.

திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு தாசில்தார் நக்கீரன் தலைமை தாங்கினார். இதில் முன்னோடி விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கைவிட வேண்டும்

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக பாசன வாய்க்கால்களை கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டும். மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல சக்தி துறையுடன் இணைப்பதை கைவிட வேண்டும்.

மேலும் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வங்கி கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 2019-2020-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக கவசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் விவசாயிகள் பேசினர். இதில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சுந்தரமூர்த்தி, மாசிலாமணி, ராமமூர்த்தி, வரதராஜன், அழகர்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி

மன்னார்குடியில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு தாசில்தார் கார்த்திக் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி நீர் பாசன விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் மன்னார்குடி ரெங்கநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உரம், பூச்சி மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டுக்கான நடவு, உழவு மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும். நடப்பு ஆண்டுக்கான குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பே முடித்திட வேண்டும்.

அறுவடை எந்திரங்கள்

மன்னார்குடி வட்டத்துக்கு 25 அறுவடை எந்திரங்கள் மற்றும் 25 டிராக்டர்கள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் விவசாயிகள் பேசினர்.

முடிவில் மண்டல துணை தாசில்தார் செந்தில் நன்றி கூறினார்.

Next Story