நடிகர் சல்மான்கான் வருவதாக வதந்தி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சாலையில் குவிந்ததால் பரபரப்பு ஊரடங்கு, சமூக இடைவெளி காற்றில் பறந்தது


நடிகர் சல்மான்கான் வருவதாக வதந்தி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சாலையில் குவிந்ததால் பரபரப்பு ஊரடங்கு, சமூக இடைவெளி காற்றில் பறந்தது
x
தினத்தந்தி 22 May 2020 12:02 AM GMT (Updated: 22 May 2020 12:02 AM GMT)

மும்பை அருகே நடிகர் சல்மான் கான் வருவதாக கிளம்பிய வதந்தியால் ஊரடங்கை காற்றில் பறக்கவிட்டு ரசிகர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் சாலையில் திரண்டனர்.

தானே,

தானே மாவட்டம் பிவண்டி தாலுகா காந்துபாடா பகுதியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்கு இந்தி நடிகர் சல்மான் கான் வருகை தருவதாகவும், ஏழை, எளிய குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க இருப்பதாகவும் வதந்தி கிளம்பியது.

இந்த வதந்தி அப்பகுதி மக்களிடையே காட்டுத்தீயாக பரவியதால் அவரது ரசிகர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் வீதிக்கு வர தொடங்கினர். தகவல் அறிந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் ஊரடங்கு, கொரோனா பயத்தை எல்லாம் மறந்து ஆயிரக்கணக்கில் சாலைகளில் திரண்டனர். சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு கூட்டமாக கூடிய ரசிகர்கள் பலர் உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

இதையடுத்து கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். மேலும் போலீசார் மைக் மூலம், நடிகர் சல்மான்கான் வருவதாக கூறப்படுவது வெறும் வதந்தி எனவும், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்லுமாறும் வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை விடுத்தனர். போலீசாரின் ெதாடர் முயற்சியால் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக குவிந்து இருந்த ெபாதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பிவண்டி, விசைத்தறி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். கொரோனா பாதிப்பு காரணமாக இங்கு தொழில் நிறுவனங்களும் செயல்படவில்லை. தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வரும் நிலையில், நடிகர் சல்மான் கான் வருவதாக கருதி ஆயிரக்கணக்கானோர் திரண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வதந்தியை கிளப்பியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story