ஓசூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவருடன், தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்


ஓசூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவருடன், தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்
x
தினத்தந்தி 22 May 2020 12:23 AM GMT (Updated: 22 May 2020 12:23 AM GMT)

ஓசூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவருடன், தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நேற்று ஒன்றியக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சசி வெங்கடசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாராயணசாமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆப்தாப் பேகம், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கவுன்சிலர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்ட இதில், கூட்டம் தொடங்கியதும், கவுன்சிலர்களின் வார்டு பகுதிகளில் தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் போர்வெல் அமைத்ததாக தி.மு.க. கவுன்சிலர்கள் கோபால், ராதா ஆகியோர் ஆவேசத்துடன் தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினார்கள்.

இந்த பரபரப்புக்கிடையில், போலீசாரும் கூட்ட அரங்கத்தின் உள்ளே வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தி.மு.க. கவுன்சிலர்களை சமரசம் செய்து, இனி வரும் நாட்களில் கவுன்சிலர்களுககு அனைத்து திட்டப்பணிகள் குறித்தும் உரிய முறையில் தெரிவிக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

மேலும், சாதாரண கூட்டம்தான் நடைபெறுகிறது, பிரச்சினை எதுவும் இல்லை என்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூறியதையடுத்து போலீசாரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து விரிவாக கூறப்பட்டது. கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான பணிகள் குறித்து தெரிவிக்குமாறும் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

பின்னர், கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் முடிந்து வெளியே வந்த தி.மு.க. கவுன்சிலர்கள் நிருபர்களிடம் கூறுகையில், ஒன்றியக்குழு தலைவர், பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறார், அவர் எங்களை மதிப்பதே இல்லை என்று குற்றம்சாட்டி, இது சம்பந்தமாக கலெக்டரிடம் புகார் அளிப்பதாக தெரிவித்தனர்.

Next Story