வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் - கலந்தாய்வு கூட்டத்தில் அதிகாரி வலியுறுத்தல்


வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் - கலந்தாய்வு கூட்டத்தில் அதிகாரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 May 2020 12:26 AM GMT (Updated: 22 May 2020 12:26 AM GMT)

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என கலந்தாய்வு கூட்டத்தில் அதிகாரி வலியுறுத்தினார்.

தென்காசி, 

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கை குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. தென்காசி மாவட்ட கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குனருமான மு.கருணாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் பேசியதாவது:-

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2-வது தவணை நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும். தற்போது வரை நிறுவனங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும். நோய் தொற்று கண்காணிப்பு சோதனைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் உணவின் தரத்தை சோதனையிட்டு தொடர்ந்து சுகாதார இணை இயக்குனர் கண்காணிக்க வேண்டும். பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்ட தளர்வுகளை பற்றி தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் பேசியதாவது:-

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு கடந்த 4-ந் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. 18-ந் தேதி முதல் அரசு அலுவலகங்கள் அனைத்தும் 50 சதவீத பணியாளர்களுடன் வாரத்தில் 6 நாட்கள் இயங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு செல்ல ஏதுவாக அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயணிக்கும் அரசு அலுவலர்கள் அனைவரும் முக கவசம் மற்றும் அடையாள அட்டை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். கடை அளவை பொறுத்து எவ்வளவு வாடிக்கையாளர், எவ்வளவு பணியாளர்கள் கடைக்குள் இருக்கலாம் என்பது தொடர்பான விவரத்தை விளம்பர பலகையில் குறிப்பிட்டு கடைக்கு வெளியே அறிவிப்பு செய்யும் பட்சத்தில் தேவையில்லாத சமூக விலகல் விதிமீறலை தடுக்க நடவடிக்கையாக அமையும்.

மேலும், முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத பொதுமக்கள் மற்றும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நுழைவு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அனுமதியின்றி வருவோர் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், வருவாய் அலுவலர் கல்பனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மரகதநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகரன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் ராஜா, கடையநல்லூர் தாசில்தார் அழகப்பராஜா, புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார்சிங் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story