20 நாட்களுக்கு பிறகு கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு தண்ணீர் வந்தது


20 நாட்களுக்கு பிறகு கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு தண்ணீர் வந்தது
x
தினத்தந்தி 22 May 2020 12:33 AM GMT (Updated: 22 May 2020 12:33 AM GMT)

கிருஷ்ணகிரியில் கே.ஆர்.பி. அணை அமைந்துள்ளது. 52 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 8 மதகுகள் உள்ளன.

கிருஷ்ணகிரி,

கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் அணையின் முதல் மதகில் உடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தற்காலிகமாக மதகு அமைக்கப்பட்டது. பிறகு அந்த மதகை மாற்றி புதிய மதகு அமைக்கப்பட்டது. இதன்பிறகு அணையில் உள்ள மற்ற 7 மதகுகளையும் மாற்றி புதிதாக மதகுகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் அணையில் மதகுகள் அமைக்கும் பணி காரணமாக தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டது. மேலும் வறட்சி காரணமாக அணையில் தண்ணீர் குறைந்தது. இதனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி அணை முழுமையாக வறண்டது.

கடந்த வாரம் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் நேற்று அணையின் நீர்மட்டம் 40.67 அடியாக இருந்தது. கடந்த 2 நாட்களாக அணைக்கு வந்த 400 கன அடி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக 20 நாட்களுக்கு பிறகு கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நேற்று தண்ணீர் வந்தது. அணையில் 12 அடி அளவிற்கு மண் சேர்ந்துள்ளதாலும், கடந்த 2 நாட்களாக 4.2 அடி உயரத்திற்கு தண்ணீர் வந்துள்ளதாலும் நேற்று மதிய நிலவரப்படி கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 16.50 அடியாக உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் எதுவும் திறக்கப்படவில்லை.

Next Story