ஊரடங்கால் விலை சரிவு: நிலக்கடலையை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


ஊரடங்கால் விலை சரிவு: நிலக்கடலையை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 May 2020 12:47 AM GMT (Updated: 22 May 2020 12:47 AM GMT)

ஊரடங்கால் விலை சரிந்ததால் நிலக்கடலையை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவெண்காடு, 

ஊரடங்கால் விலை சரிந்ததால் நிலக்கடலையை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலக்கடலை விலை சரிவு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரெயில், பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் தங்களது விளை பொருட்களை வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் திருவெண்காடு, ராதாநல்லூர், இளையமதுக்கூடம், எம்பாவை, மங்கைமடம், திருக்கடையூர், திருமெய்ஞானம், சிங்கானோடை, கருவி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகமான நிலப்பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்திருந்தனர். இந்த ஆண்டுக்கான சீசனில் நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள், நிலக்கடலையை விற்பனை செய்ய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஊரடங்கு காரணமாக 50 நாட்களுக்கு மேலாக நிலக்கடலையை வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை.

இதனால் நிலக்கடலை விற்பனையாகாமல், அதன் விலை சரிந்து வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நிலக்கடலையை மூட்டைகளாக கட்டி அடுக்கி வைத்துள்ளனர்.

இதுகுறித்து திருவெண்காடு பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

அரசே கொள்முதல் செய்ய வேண்டும்

வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு நிலக்கடலை சாகுபடி அமோகமாக இருந்தது. பெரும்பாலும் இங்கு விளைவிக்கப்படும் நிலக்கடலையை மதுரை, நெல்லை, கோவை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பெரிய வியாபாரிகள் வாங்கி செல்வர். ஆனால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நீட்டிக்கும் ஊரடங்கால் நிலக்கடலையை வாங்க வெளியூர் வியாபாரிகள் வரவில்லை. இதனால் முன்பு நிலக்கடலை மூட்டை ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.2 ஆயிரத்து 800 வரை விற்பனையானது.

தற்போது நிலக்கடலை மூட்டையை ரூ.2 ஆயிரத்துக்கு வாங்குவதற்கு கூட வியாபாரிகள் வருவதில்லை. இதனால் வந்த விலைக்கு உள்ளூரில் உள்ள சிறிய வியாபாரிகளிடம் நிலக்கடலையை விற்று வருகிறோம். இதன் காரணமாக கடன் வாங்கி சாகுபடி செய்த தொகை கூட கிடைக்கவில்லை. எனவே, தமிழக அரசு நிலக்கடலையை கொள்முதல் செய்து வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story