பஸ்களை இயக்குவதற்கு தயார் நிலையில் கோவில்வழி தற்காலிக பஸ் நிலையம்


பஸ்களை இயக்குவதற்கு  தயார் நிலையில் கோவில்வழி தற்காலிக பஸ் நிலையம்
x
தினத்தந்தி 22 May 2020 12:59 AM GMT (Updated: 22 May 2020 12:59 AM GMT)

திருப்பூர் கோவில் வழியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையம் பஸ்களை இயக்க தயார் நிலையில் உள்ளது.

திருப்பூர், 

திருப்பூரில் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பழைய பஸ் நிலையம் முற்றிலும் இடித்து விட்டு, நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. இதற்காக பழைய பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடங்கள், வணிக வளாகங்கள் காலி செய்யப்பட்டு, அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு வருகிறது.

எனவே புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்கும் வரை தற்காலிக பஸ் நிலையம் அமைக்க வேண்டும். எனவே போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க பல்வேறு பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் கோவில் வழி பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பதே போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கோவில் வழி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு, அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டன. அங்கு ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் நிறுத்துவதற்கும், ரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தயார் நிலையில்...

இதை தவிர பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு குடிநீர், மின் விளக்கு, கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிந்து பஸ் நிலையம் தயார் நிலையில் உள்ளது. ஊரடங்கு முடிந்து, பஸ்கள் அனைத்தும் இயக்கப்படும் நிலையில், இந்த தற்காலிக பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story