உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் ஊராட்சி மன்ற தலைவி கலெக்டரிடம் மனு


உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால்  துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும்  ஊராட்சி மன்ற தலைவி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 22 May 2020 1:12 AM GMT (Updated: 22 May 2020 1:12 AM GMT)

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கலெக்டரிடம், ஊராட்சி மன்ற தலைவி மனு கொடுத்துள்ளார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டச்சி புதூர் ஊராட்சி மன்ற தலைவியாக இருந்து வருபவர் செல்வி. இவர் தனது கணவர் ரமேஷ் மற்றும் சாதி ஒழிப்பு கூட்டு இயக்கத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் விஜயகார்த்திகேயனை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 4-ந் தேதி சீருடை, சத்து மாத்திரை வழங்குவது குறித்த ஆய்வுப் பணியில் நான் ஈடுபட்டேன். அப்பொது 6-வது வார்டு உறுப்பினர் எனது சாதி பெயரை சொல்லி என்னை இழிவு படுத்தியதுடன் மிரட்டலும் விடுத்தார். இதுகுறித்து தாராபுரம் போலீஸ் நிலையத்தில் நான் புகார் கொடுத்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 14 நாட்கள் ஆன பின்னரும் அவர் கைது செய்யப்படவில்லை.

எனவே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும். மேலும் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் எனக்கும், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு

கலெக்டரிடம் மனுவை கொடுத்துவிட்டு வந்த செல்வி நிருபர்களிடம் கூறும்போது “நான் ஊராட்சி மன்ற தலைவியாக பதவியேற்ற நாள் முதல் இதுவரைக்கும் எனக்கு சாதிய வன்கொடுமை நடந்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் நான் அச்சத்துடனேயே பணிக்கு சென்று வருகின்றேன். எனது கணவரின் பாதுகாப்புடன் அலுவலகம் சென்று வருகின்றேன். எனவே எனக்கு உரிய பாதுகாப்பு தருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதே மனுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தலிடமும் வழங்கினார்.

Next Story