நெல்லையில் வீடுகளுக்கு கலங்கலாக வந்த குடிநீர் பாபநாசத்தில் அதிகாரிகள் ஆய்வு


நெல்லையில் வீடுகளுக்கு கலங்கலாக வந்த குடிநீர் பாபநாசத்தில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 22 May 2020 3:15 AM GMT (Updated: 22 May 2020 3:15 AM GMT)

நெல்லையில் வீடுகளுக்கு கலங்கலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து பாபநாசத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விக்கிரமசிங்கபுரம், 

நெல்லையில் வீடுகளுக்கு கலங்கலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து பாபநாசத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கலங்கலாக குடிநீர்

தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயத்துக்கும், பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்த ஆற்றுக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து நேரடியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது குடிநீருக்காகவும், ஒரு சில பகுதி விவசாய தேவைகளுக்காகவும் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக தாமிரபரணி தண்ணீர் சிவப்பு நிறத்தில் ஓடுகிறது.

இதனால் நெல்லை மாநகர் மற்றும் தாமிரபரணி ஆற்றில் உறைகிணறுகள் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லப்படும் பகுதிகளுக்கு குடிநீர் கலங்கலாக வினியோகம் செய்யப்படுகிறது. நெல்லை மாநகராட்சி சார்பில் தாமிரபரணியில் தண்ணீரை எடுத்து சுத்திகரித்து, குளோரின் கலந்து வீடுகளுக்கு வழங்கப்படுகிறது. இருந்த போதிலும் தண்ணீர் கலங்கலாக சிவப்பு கலந்த மஞ்சள் நிறமாக உள்ளது.

பாபநாசம்-சேர்வலாறு

இதுதொடர்பாக பாபநாசம் மின்வாரிய அதிகாரி வெங்கடாசலம் கூறுகையில், “பாபநாசம் காரையாறு அணை மற்றும் சேர்வலாறு அணைகள் சுரங்கம் வழியாக இணைக்கப்பட்டு இருக்கும். எப்போதும் பாசனம் மற்றும் குடிநீருக்காக சேர்வலாறு அணை வழியாக மட்டுமே தண்ணீர் திறக்கப்படும். அவ்வாறு திறக்கும் பட்சத்தில் சேர்வலாறு அணை நீர்மின்திட்டம், கீழணை நீர்மின் திட்டங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படும்.

ஆனால் தற்போது பாபநாசம் அணை நீர்மட்டம் சுரங்கப்பாதை வழியாக தண்ணீர் வெளியேற்ற முடியாத நிலைக்கு கீழாக சென்று விட்டது. தற்போது பாபநாசம் அணை நீர்மட்டம் 41.20 அடியாக உள்ளது. இதனால் பாபநாசம் அணையில் இருந்து மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அடிப்பகுதியில் உள்ள தண்ணீர் திறக்கப்படுவதால் தண்ணீர் கலங்கலாக சிவப்பு நிறத்தில் வெளியேறுகிறது. இந்த நிலை 2 நாட்களில் சரியாகி விடும்“ என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், “பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 405 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதுதவிர மணிமுத்தாறு அணையில் இருந்தும் 425 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் 75 கன அடி பெருங்கால் பாசனத்துக்கும், 350 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றிலும் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் சுத்தமாக உள்ளது.

ஆனால் பாபநாசம் அணை பகுதியில் இருந்து வருகிற தண்ணீரே சிவப்பு நிறத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. தற்போது பாபநாசம் அணைக்கு வருகிற தண்ணீரின் அளவு 153 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையால் விரைவில் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து கூடுதல் தண்ணீர் அணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில் பாசனம் மற்றும் குடிநீருக்காக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கூடுதலாக திறந்து விடப்பட்டுள்ளது“ என்றனர்.

Next Story