கரூரில் இருந்து பீகார் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர் 16 பஸ்கள் மூலம் அனுப்பி வைப்பு


கரூரில் இருந்து பீகார் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர் 16 பஸ்கள் மூலம் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 22 May 2020 5:33 AM GMT (Updated: 22 May 2020 5:33 AM GMT)

கரூரில் இருந்து, பீகார் மாநில தொழிலாளர்கள் 16 பஸ்கள் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

வேலாயுதம்பாளையம், 

கரூரில் இருந்து, பீகார் மாநில தொழிலாளர்கள் 16 பஸ்கள் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள பிற மாநில தொழிலாளர்களில், சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்களை அவர்களது ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் 14 மாநிலங்களை சேர்ந்த 7,779 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் 2,802 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர்.

3-வது கட்டமாக...

இவர்களில் முதற்கட்டமாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 254 பேரும், 2-வது கட்டமாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 35 பேரும் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து 3-வது கட்டமாக கரூர் மாவட்டம், புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 604 பேர் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் சமூக இடைவெளியுடன் நிற்க வைக்கப்பட்டு, முக கவசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது. அப்போது மாவட்ட கலெக்டர் அன்பழகன் அவர்களிடம் இந்தி மொழியிலேயே உரையாற்றினார்.

சொந்த ஊர் புறப்பட்டனர்

பின்னர் அவர்களை 16 பஸ்கள் மூலம் நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன், புகளூர் வட்டாட்சியர் சிவக்குமார், புன்செய்புகளூர் பேரூராட்சி செயலாளர் சத்யநாராயணன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். அப்போது தொழிலாளர்கள் எங்கள் அனைவரையும் பாதுகாப்பாக தங்க வைத்து, நல்ல உணவும் அளித்து தற்போது எங்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்து கொண்டார்கள். இவர்கள் நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து, சிறப்பு ரெயில் மூலம் பீகார் மாநிலத்திற்கு புறப்பட்டு செல்கின்றனர்.

இந்தநிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், தாசில்தார்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story