பெரம்பலூர்-அரியலூரில் விவசாய மின் இணைப்புகளில் கூடுதல் மின்பளு பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்


பெரம்பலூர்-அரியலூரில் விவசாய மின் இணைப்புகளில் கூடுதல் மின்பளு பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 22 May 2020 6:34 AM GMT (Updated: 22 May 2020 6:34 AM GMT)

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் விவசாய மின் இணைப்புகளில் கூடுதல் மின்பளு பெற விண்ணப்பிக்கலாம் என்று மின்சார வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர், 

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் விவசாய மின் இணைப்புகளில் கூடுதல் மின்பளு பெற விண்ணப்பிக்கலாம் என்று மின்சார வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

கூடுதல் மின்பளு

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் கருப்பையா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழக விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய மின் இணைப்புகளில் கூடுதல் மின்பளு பெறுவதற்காக புதிய தட்கல் கூடுதல் மின்பளு திட்டம் 2020-21 தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பளு மற்றும் தற்போது கோரப்படும் கூடுதல் பளு ஆகிய இரண்டும் சேர்ந்த 15 குதிரைத்திறனுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு குதிரைத்திறனுக்கு ரூ.20 ஆயிரம் செலுத்தவேண்டும். மின் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ள மின்மாற்றியில் போதுமான திறன் இருந்தால் கூடுதல் மின்பளு வழங்கப்படும்.

சான்றிதழ் பெற தேவையில்லை

விண்ணப்பத்தில் இதற்கு சம்மதம் தெரிவித்து, தங்களது பகுதிக்கு உட்பட்ட செயற்பொறியாளரிடம் கடிதம் அளிக்கவேண்டும். அதனை தொடர்ந்து கள ஆய்வு செய்யப்பட்டு திறன் இருந்தால் கூடுதல் மின்பளு பெறுவதற்கு தயார் நிலையினை பதிவு செய்ய செயற்பொறியாளரிடம் இருந்து விண்ணப்பதாரர்களுக்கு அறிவிப்பு கடிதம் அனுப்பப்படும்.

கடிதம் பெற்ற விண்ணப்பதாரர்கள் கூடுதல் மின்பளுவிற்கான விண்ணப்ப பதிவு கட்டணத்தை ஒரே தவணையில் 30 நாட்களுக்கு பதிவு அலுவலகத்தில் செலுத்தி மின்மோட்டார் மற்றும் கெபாசிட்டருடன் தயார்நிலை பதிவு செய்யவேண்டும். தயார்நிலை முன்னுரிமைப்படி கூடுதல் மின்பளு வழங்கப்படும். இதற்கு கிராம நிர்வாக அதிகாரியின் சான்றிதழ் பெற தேவையில்லை.

30-ந் தேதிக்குள்...

பெயர் மாற்றம் செய்யவேண்டிய விண்ணப்பதாரர்கள் முதலில் பெயர் மாற்றம் அனுமதி பெற்று பின் கூடுதல் மின்பளுவிற்கு விண்ணப்பிக்கவேண்டும். மேலும் இந்த திட்டத்தில் அடுத்த மாதம் (ஜூன்) 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கும் விவசாயிகள் மட்டுமே பயன்பெறமுடியும்.

இதுகுறித்து கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள அரியலூர் மாவட்ட விண்ணப்பதாரர்கள் அரியலூர் செயற்பொறியாளருக்கு 94458 53675 என்ற தொலைபேசி எண்ணிற்கும், பெரம்பலூர் மாவட்ட விண்ணப்பதாரர்கள் பெரம்பலூர் செயற்பொறியாளருக்கு 94458 53641 என்ற தொலைபேசி எண்ணிற்கும் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story