கர்நாடகத்தில் ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு சுகாதாரத்துறை தகவல்


கர்நாடகத்தில் ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 22 May 2020 10:00 PM GMT (Updated: 22 May 2020 8:26 PM GMT)

கர்நாடகத்தில் ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 597 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் 1,563 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 138 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,701 ஆக உயர்ந்துள்ளது. 597 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 42 பேர் மரணம் அடைந்து உள்ளனர். தற்போது 1,104 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

புதிதாக கொரோனா பாதித்தவர்களில் பெங்களூரு நகரில் 5 பேர், மண்டியாவில் 8 பேர், பெலகாவியில் ஒருவர், தாவணகெரேயில் 3 பேர், ஹாசனில் 14 பேர், பாகல்கோட்டையில் ஒருவர், பீதரில் 9 பேர், சிக்பள்ளாப்பூரில் 47 பேர், விஜயாப்புராவில் 7 பேர், உத்தரகன்னடாவில் ஒருவர், தட்சிண கன்னடாவில் ஒருவர், உடுப்பியில் 3 பேர், தார்வாரில் 2 பேர், சிவமொக்காவில் 2 பேர், ராய்ச்சூரில் 10 பேர், துமகூருவில் 8 பேர், யாதகிரியில் 2 பேர், சித்ரதுர்காவில் ஒருவர், பெங்களூரு புறநகரில் 5 பேர், சிக்கமகளூருவில் 5 பேர், ஹாவேரியில் 3 பேர் உள்ளனர்.

கர்நாடகத்தில் இதுவரை 1 லட்சத்து 86 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் நேற்று மட்டும் 12 ஆயிரத்து 229 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 143 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் 138 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் கடந்த ஒருவாரமாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.


Next Story