கர்நாடகத்துக்குள் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் அதிகாரிகளுக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு


கர்நாடகத்துக்குள் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் அதிகாரிகளுக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு
x
தினத்தந்தி 22 May 2020 10:15 PM GMT (Updated: 22 May 2020 8:30 PM GMT)

தமிழ்நாடு, மராட்டியத்தில் இருந்து சட்டவிரோதமாக கர்நாடகத்துக்குள் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மராட்டியம், தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்களால் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், கேரள மாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வருவதற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகத்திற்கு பாஸ் பெற்று வருபவர்கள் தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் தீவிர பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு வந்தாலும், அவர்கள் 14 நாட்கள் தனிமை கண்காணிப்பில் இருக்க வேண்டும். இதன் காரணமாக பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திப்பள்ளி அருகே பல்லூரு, சேலூரு கிராமங்கள் வழியாக தமிழ்நாட்டில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் எல்லை தாண்டி சட்டவிரோதமாக பெங்களூருவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

அந்த கிராமங்கள் வழியாக மக்கள் சட்டவிரோதமாக வருவதை தடுக்க மண் மேடு அமைக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இருந்து மண் மேடுவை அகற்றிவிட்டு தமிழ்நாட்டில் இருந்து இருசக்கர வாகனங்கள், நடைபாதையாக தினமும் ஏராளமானவர்கள் பெங்களூருவுக்கு வருகின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாக வருபவர்கள் பற்றி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ்நாடு போன்று மராட்டிய மாநிலத்தில் இருந்தும் பெலகாவி, யாதகிரி, பீதர் மாவட்டத்திற்கு சட்டவிரோதமாக மக்கள் கர்நாடகத்துக்குள் வருகிறார்கள். எல்லை பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தாலும், அவர்களது கண்ணில் படாமல் தமிழ்நாடு, மராட்டியத்தில் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கர்நாடகத்திற்குள் வருகின்றனர். இது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.

இதுபற்றி முதல்-மந்திரி எடியூரப்பாவின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகளுடன் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாடு, மராட்டியம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக கர்நாடகத்திற்குள் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் படியும், எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் படியும், அவ்வாறு வருபவர்களை தனிமை கண்காணிப்பில் வைக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதல்-மந்திரியின் உத்தரவை தொடர்ந்து பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவி டி.சன்னன்னவர் நேற்று மதியம் அத்திப்பள்ளிக்கு சென்று பார்வையிட்டார். மேலும் சட்டவிரோதமாக வருபவர்களை தடுக்க பல்லூரு கிராமத்தில் பொக்லைன் எந்திரம் மூலமாக மண் அள்ளி குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சட்டவிரோதமாக வருபவர்களை பிடித்து 14 நாட்கள் தனிமை கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு ரவி டி.சன்னன்னவர் எச்சரித்துள்ளார். கர்நாடக-மராட்டிய எல்லை பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story