சிறு, குறு தொழில்களுக்கான வங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்ய கோரிக்கை


சிறு, குறு தொழில்களுக்கான   வங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 22 May 2020 10:55 PM GMT (Updated: 22 May 2020 10:55 PM GMT)

சிறு, குறு தொழில்நிறுவனங்கள் வாங்கிய வங்கி கடன்களுக்கு 6 மாதத்திற்கான வட்டியை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை,

கோவை பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் (கோப்மா) செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் மணிராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:- சிறு, குறு தொழில்நிறுவனங்கள் வாங்கிய வங்கி கடன்களுக்கு 6 மாதத்திற்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொருளாதார முடக்கம் ஏற்பட்டு உள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் நலனை கருத்தில் கொண்டு தற்போது விதிக்கப்படும் ஜி.எஸ்டி.யை 75 சதவீதம் அளவிற்கு குறைக்க வேண்டும்.

பொருளாதார பாதிப்பை சரி செய்யும் வகையில் தொழில் முனைவோர்களுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். 10 எச்.பி. திறன்கொண்ட மோட்டார்களை பயன்படுத்தும் தொழில்நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். சிறு, குறு தொழில்நிறுவனங்கள் தான் அதிக வேலைவாய்ப்பை வழங்குகின்றன. எனவே இந்த நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு அரசு உதவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story