மும்பையில் ஆன்லைன் மதுபான விற்பனைக்கு அனுமதி மது பிரியர்கள் மகிழ்ச்சி


மும்பையில் ஆன்லைன் மதுபான விற்பனைக்கு அனுமதி மது பிரியர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 22 May 2020 11:20 PM GMT (Updated: 22 May 2020 11:20 PM GMT)

மும்பையில் ஆன்லைன் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மும்பை

கொரோனா ஊரடங்கு காரணமாக மும்பையில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி மும்பையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியதால் 2 நாளில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறந்து இருந்த போதும் மும்பையில் பூட்டியே கிடந்தன. தானேயில் ஆன்லைனில் மதுபானம் விற்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் மும்பையிலும் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மும்பை மாநகராட்சி கமிஷனா் இக்பால் சகால் பிறப்பித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்:-

மும்பையில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர மற்ற இடங்களில் வீடுகளுக்கு மதுபானம் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. எனினும் எந்த காரணத்திற்காகவும் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யப்பட கூடாது.

மதுக்கடைகள் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுடன் (இ-காமர்ஸ்) சோ்ந்து கூட மதுபானங்களை வீடுகளுக்கு டெலிவிரி செய்யலாம். மாநில அரசு மற்றும் கலால் வரித்துறையினரின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும். இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை சம்மந்தப்பட்ட வார்டு அதிகாரிகள், கலால்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மும்பையில் ஆன்லைன் மதுவிற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மதுபிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story