வேலூரில் 108 டிகிரி வெயில் கொளுத்தியதால் அனல் காற்று; மாலையில் சூறாவளி காற்றுடன் மழை


வேலூரில் 108 டிகிரி வெயில் கொளுத்தியதால் அனல் காற்று; மாலையில் சூறாவளி காற்றுடன் மழை
x
தினத்தந்தி 23 May 2020 12:00 AM GMT (Updated: 22 May 2020 11:52 PM GMT)

வேலூரில் நேற்று 108.3 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில் அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் அவதிப்பட நேர்ந்தது.

வேலூர், 

வேலூரில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் தான் வேலூரை வெயிலூர் என்று அழைக்கின்றனர். சாதாரண நாட்களிலேயே சராசரியாக 100 டிகிரி கொளுத்தும் வெயில் தற்போது மேலும் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. வேலூரில் கடந்த 2 நாட்களாக 106.3 டிகிரி, 107.2 டிகிரி என்று நாள்தோறும் வெப்பத்தின் அளவு உயர்ந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகபட்சமாக 108.3 டிகிரி (42.4 செல்சியஸ்) பதிவானது.

இதனால் காலை 10 மணிக்கே உச்சிவெயில் போல் வாட்டி எடுத்தது. மதிய வேளையில் வெயில் கடுமையாக சுட்டெரித்தது. வெயில் மற்றும் ஊரடங்கு காரணமாக வழக்கத்தைவிட பொதுமக்களின் நடமாட்டம் சாலையில் குறைவாகவே காணப்பட்டது. பெரும்பாலானோர் வீடுகளுக்குள் முடங்கினார்கள்.

வெயிலின் தாக்கத்தால் சாலைகளில் கானல்நீர் காட்சியளித்தது. மேலும் அனல் காற்றும் வீசியது. அதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அனல்காற்றை தாங்க முடியாமல் தவித்தனர். சாலைகளில் சென்ற பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க கரும்புச்சாறு, மோர், இளநீர், நுங்கு விற்கும் இடங்களை நாடினர். கொளுத்தும் வெயிலுக்கு பலர் தலையில் துணியை போட்டுக்கொண்டும் குடைகளை பிடித்துக்கொண்டும் சென்றதை பார்க்க முடிந்தது.

பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் வானில் மேகங்கள் திரண்டன. அதைத்தொடர்ந்து சூறைக்காற்று வீசியது. சிறிதுநேரத்துக்கு பின்னர் லேசான மழை பெய்தது. பின்னர் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது.

சூறைக்காற்று காரணமாக வேலூர் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின்னரே மீண்டும் மின்வினியோகம் செய்யப்பட்டது. அக்னி நட்சத்திரம் வருகிற 28-ந் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் வெயில் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பகல் முழுவதும்தான் வெயில் வாட்டி வதைக்கிறது என்றாலும் இரவிலும் அனல் காற்று வீசுகிறது. கோடை வெயிலை மழை பெய்தால்தான் சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Next Story