மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 2,940 பேருக்கு கொரோனா


மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 2,940 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 May 2020 12:20 AM GMT (Updated: 23 May 2020 12:20 AM GMT)

மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 2,940 பேருக்கு கொரோனா

மும்பை,

மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் புதிதாக 2 ஆயிரத்து 940 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் மராட்டியத்தை புரட்டிப்போட்டு உள்ளது. மாநிலத்தில் காட்டு தீயை போல வேகமாக நோய் தொற்று பரவி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக நோய் பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 5 நாளில் மட்டும் மாநிலத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் 2 ஆயிரத்து 940 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மராட்டியத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 44 ஆயிரத்து 582 ஆக அதிகரித்து உள்ளது.

இதேபோல மாநிலத்தில் புதிதாக 63 பேர் நோய் பாதிப்பால் உயிரிழந்தனர். இதுவரை மாநிலத்தில் 1,517 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். மாநிலத்தில் இதுவரை 12 ஆயிரத்து 583 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். இதில் நேற்று மட்டும் 857 பேர் வைரஸ் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்து 474 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையை பொறுத்தவரை நேற்று புதிதாக 1,751 பேர் ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டனர். இதனால் மும்பை மாநகராட்சி பகுதியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 251 ஆக அதிகரித்து உள்ளது.

இதேபோல நகரில் புதிதாக 27 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தனர். இதுவரை மும்பையில் 909 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தாராவியில் புதிதாக 53 பேருக்கு தொற்று


மும்பை தாராவி பகுதியில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று அங்கு புதிதாக 53 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக மாட்டுங்கா லேபர் கேம்ப் பகுதியில் 9 வயது சிறுமி உள்பட 14 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர 90 அடி சாலை பகுதியில் 6 பேரும், கிராஸ் ரோட்டில் 3 பேரும், சாகுநகர், முகுந்த் நகர், கும்பர்வாடா, பி.எம்.ஜி.பி. காலனி, அபுபக்கர்சால், டிரான்சிஸ்ட் கேம்ப் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல தேவர் குடியிருப்பில் 6 வயது சிறுவன் ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். தாராவியில் இதுவரை 1,478 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தாராவியில் 85 வயது மூதாட்டி ஒருவர் நோய் தொற்றுக்கு பலியாகி உள்ளார். இதனால் இங்கு நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மாகிம் பகுதியில் புதிதாக 23 பேருக்கும், தாதரில் 13 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை முறையே 286, 205 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story