ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்


ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
x
தினத்தந்தி 23 May 2020 1:56 AM GMT (Updated: 23 May 2020 1:56 AM GMT)

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 51 ஆக உள்ளது. அவர்களில் 22 பேர் முழுமையாக குணமாகி வீடு திரும்பி விட்டனர்.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 51 ஆக உள்ளது. அவர்களில் 22 பேர் முழுமையாக குணமாகி வீடு திரும்பி விட்டனர். ஒரு முதியவர் இறந்து விட்டார். 26 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்கள்.

இந்த நிலையில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 26 பேரில் நாகர்கோவிலை அடுத்த ஆளூர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் ஆவர். இவர்கள் சென்னையில் இருந்து குமரிக்கு வந்தவர்கள்.

இதற்கிடையே அவர்களுக்கு மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று நீங்கியிருந்தது தெரிய வந்தது. கணவருக்கு கொரோனா பாதிப்பு நீங்கவில்லை. இதையடுத்து அந்த பெண் மற்றும் 2 குழந்தைகளையும் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வாழ்த்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களும் மகிழ்ச்சியோடு, டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டுச் சென்றனர். இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 23 ஆக குறைந்துள்ளது. முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

Next Story