திருப்பூரில் 30 இடங்களில் பெண் தொழிலாளர்கள் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம்


திருப்பூரில் 30 இடங்களில்  பெண் தொழிலாளர்கள் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 May 2020 2:42 AM GMT (Updated: 23 May 2020 2:42 AM GMT)

திருப்பூரில் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் 30 இடங்களில் பெண் தொழிலாளர்கள் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

அனுப்பர்பாளையம், 

திருப்பூரில் அனுகதம் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாண்டியன்நகர், பிச்சம்பாளையம்புதூர், சிறுபூலுவப்பட்டி, முருகம்பாளையம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண் தொழிலாளர்கள் கருப்பு சின்னம் அணிந்தும், கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருப்பூர் மாவட்டத்தில் பனியன் உற்பத்தி சார்ந்த ஆயிரக்கணக்கான வீட்டு தொழிலாளர்களை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து அவர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும். 8 மணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கக் கூடாது.

பொது முடக்கத்தால் வருமானம் இழந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு தலா ரூ.7,500 வீதம் நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை காவல்துறை நிறுத்துவதுடன், கட்டணமின்றி சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏற்பாடு செய்து தர வேண்டும். வட்டிக்கு பணம் வாங்கியவர்களை கந்து வட்டி கும்பல் மிரட்டி துன்புறுத்துகின்றனர். அவர்கள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சர், தொழிலாளர் நலத்துறை மற்றும் மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

Next Story