தட்கல் திட்டத்தில் கூடுதல் மின்பளு கேட்டு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்; அதிகாரி தகவல்


தட்கல் திட்டத்தில் கூடுதல் மின்பளு கேட்டு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்; அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 23 May 2020 3:44 AM GMT (Updated: 23 May 2020 3:44 AM GMT)

கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி, 

 தமிழகத்தில் ஏற்கனவே விவசாய மின் இணைப்பு பெற்று அனுபவித்து வரும் விவசாயிகள் தங்களது மின் இணைப்புகளுக்கு கூடுதல் மின்பளு தேவைப்பட்டால் தட்கல் திட்டத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு எரிசக்தி துறை மூலம் அரசாணை பிறப்பித்துள்ளது. 

இந்த தட்கல் திட்டத்தில் கூடுதல் மின்பளு பெற ஒரு குதிரைத்திறனுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் ஒருமுறை செலுத்தும் கட்டணமாக வசூல் செய்யப்படும். அவ்வாறு கூடுதல் மின்பளு கோரி விண்ணப்பிக்கும்போது ஏற்கனவே உள்ள மின்பளுவும் தற்போது கூடுதலாக கேட்கப்படும் மின்பளுவும் சேர்த்து 15 குதிரைத்திறனுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

மேற்படி கூடுதல் மின்பளு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு அமைந்துள்ள மின்மாற்றியில் கொள்திறன் போதுமானதாக இருந்தால் முன்னுரிமை அடிப்படையில் கூடுதல் மின்திறன் வழங்கப்படும். 

எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தட்கல் விவசாய கூடுதல் மின்பளு திட்டத்தின் கீழ் கூடுதல் மின்பளு கேட்டு விண்ணப்பங்களை அடுத்த மாதம்(ஜூன்) 30-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story