ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 204 பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்


ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 204 பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்
x
தினத்தந்தி 23 May 2020 4:28 AM GMT (Updated: 23 May 2020 4:28 AM GMT)

ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 204 பேர் பஸ்கள் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

நொய்யல், 

ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 204 பேர் பஸ்கள் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

ஊரடங்கு அமல்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள பிற மாநில தொழிலாளர்களில், சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் உள்ளவர்களை அவர்களது ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் 14 மாநிலங்களை சேர்ந்த 7,779 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் 2,802 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர்.

ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள்

இவர்களில் முதல்கட்டமாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 254 பேரும், 2-வது கட்டமாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 35 பேரும், 3-வது கட்டமாக பீகார் மாநிலத்தை சேர்ந்த 604 பேரும் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து 4-வது கட்டமாக கரூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து, நொய்யலில் உள்ள ஈ.வெ.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 204 பேர் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் சமூக இடைவெளியுடன் நிற்க வைக்கப்பட்டு, முக கவசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது.

சிறப்பு ரெயில் மூலம்...

பின்னர் அவர்களை 5 பஸ்கள் மூலம் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் வழியனுப்பி வைத்தார். இவர்கள் ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து, சிறப்பு ரெயில் மூலம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு புறப்பட்டு செல்கின்றனர். இதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ரெங்கராஜன், கரூர் கோட்டாட்சியர் சந்தியா, தாசில்தார்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story