கடலூர் மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை


கடலூர் மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 23 May 2020 5:33 AM GMT (Updated: 23 May 2020 5:33 AM GMT)

கடலூர் மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. 241 பேரின் உமிழ்நீர் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடலூர், 

 கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை 150 பேரின் பரிசோதனை முடிவுகள் வந்தது. அதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. இதேபோல் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதித்த 403 பேர் குணமடைந்து, அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கொரோனா பாதித்து, வீடுகளில் தனிமைப்படுத்த 4 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இது வரை 407 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களில் சென்னை, அரியலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 3 பேர் அடங்குவர். இதையடுத்து மீதியுள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 மாவட்டத்தில் இது வரை 10 ஆயிரத்து 347 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. அதில் 421 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 484 பேருக்கு பாதிப்பு இல்லை. 442 பேரின் முடிவுகள் வர வேண்டியுள்ளது.  

நேற்று 241 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 683 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story