புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 May 2020 5:58 AM GMT (Updated: 23 May 2020 5:58 AM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., சாலையோர வியாபார தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுக்கோட்டையில் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு, பஸ் நிலையம் அருகே உள்ள போக்குவரத்து கழக பணிமனை அருகே உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் தொ.மு.ச. மாவட்ட தலைவர் ரத்தினம், மாவட்ட செயலாளர் கணபதி உள்பட தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். அனைத்து உழைக்கும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும், நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பான கோஷங்களை எழுப்பினர். மேலும் கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு சட்டை அணிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி

ஆலங்குடி காமராஜர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் சொர்ணக்குமார் தலைமை தாங்கினார். இதேபோல் அரச மரம் பஸ் நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றியச் செயலாளர் வடிவேல் தலைமையிலும், வடகாடு முக்கம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே சி.ஐ.டி.யூ பாலசுப்பிரமணியன், தரணி முத்துக்குமார் ஆகியோர் தலைமையிலும், ஆலங்குடி அரசு போக்கு வரத்து கழக பணிமனை மற்றும் மின்சார அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. முருகன் மற்றும் ஜீவா ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விராலிமலை

விராலிமலை பூதகுடி சுங்கச்சாவடியில் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் மணி முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அறந்தாங்கி

அறந்தாங்கியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கவிவர்மன் தலைமை தாங்கினார். இதேபோல் அறந்தாங்கி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சி.ஐ.டி.யூ., தொ.மு.ச. ஏ.ஐ.டி.யூ.சி. தொழிலாளர்கள் சார்பில் தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் யோகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story