மராட்டியத்தில் இருந்து நெல்லை வந்த 1 வயது குழந்தை உள்பட 11 பேருக்கு கொரோனா தூத்துக்குடி-தென்காசியில் 7 பேருக்கு தொற்று


மராட்டியத்தில் இருந்து நெல்லை வந்த 1 வயது குழந்தை உள்பட 11 பேருக்கு கொரோனா தூத்துக்குடி-தென்காசியில் 7 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 23 May 2020 9:38 PM GMT (Updated: 23 May 2020 9:38 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் இருந்து நெல்லைக்கு வந்த 1½ வயது குழந்தை உள்பட மேலும் 11 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நெல்லை, 

மராட்டிய மாநிலத்தில் இருந்து நெல்லைக்கு வந்த 1½ வயது குழந்தை உள்பட மேலும் 11 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தூத்துக்குடி, தென்காசியில் 7 பேருக்கு தொற்று உறுதியானது.

மராட்டியத்தில் இருந்து திரும்பினர்

நெல்லை மாவட்டத்துக்கு மராட்டிய மாநிலத்தில் இருந்து வருகிற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மும்பை பகுதியில் இருந்து நெல்லைக்கு ரெயில் இயக்காவிட்டாலும், அவர்கள் வேன், கார்கள் மூலம் நெல்லை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

அவர்கள் அனைவரும் நெல்லை மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு வருபவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மூலம் நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 63 என்ற எண்ணிக்கையில் இருந்த கொரோனா பாதிப்பு மளமளவென்று 271 ஆக உயர்ந்தது.

மேலும் 11 பேர்

இந்த நிலையில் நேற்று இதேபோல் மராட்டியத்தில் இருந்து திரும்பி வந்தவர்களில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் ஆவார். அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை மருத்துவ குழுவினர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவரை தவிர மாவட்டத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த 10 பேர் நேற்று கொரோனா தொற்றுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் 1½ வயது ஆண் குழந்தை உள்பட 7 பேர் பெண்கள் ஆவார்கள்.

இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மொத்தம் 94 பேர் குணமடைந்துள்ளனர். ஏற்கனவே ஒருவர் இறந்து விட்டார். மீதி 187 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடியில் 5 பேருக்கு தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் நேற்று முன்தினம் வரை 144 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். தொடர்ந்து வெளிமாநிலங்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களை மாவட்ட எல்லையில் மடக்கி அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். இதில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.

அதன்படி கோவில்பட்டியில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்த 5 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்து உள்ளது.

தென்காசியில் 2 பேர்

தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே 83 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தென்காசி கீழப்புலியூரைச் சேர்ந்த டிராக்டர் டிரைவரும், கடையம் முதலியார்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த 38 வயது ஆணும் அடங்குவர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கே 85 ஆக உயர்ந்துள்ளது.

இதில் ஏற்கனவே 51 பேர் ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி இருந்த நிலையில் நேற்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதையடுத்து 33 பேர் நெல்லை, தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Next Story