கர்நாடகத்தில் 216 பேருக்கு கொரோனா மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் 192 பேர்


கர்நாடகத்தில் 216 பேருக்கு கொரோனா மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் 192 பேர்
x
தினத்தந்தி 23 May 2020 11:00 PM GMT (Updated: 23 May 2020 10:12 PM GMT)

ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக கர்நாடகத்தில் நேற்று 216 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக கர்நாடகத்தில் நேற்று 216 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மராட்டியத்தில் இருந்து வந்த 192 பேர் ஆவார்கள். மாநிலத்தில் வைரஸ் தொற்றுக்கு மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம், 1,701 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கர்நாடகத்தில் புதிதாக 216 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,917 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, பெங்களூருவை சேர்ந்த 32 வயது இளைஞர் மற்றும் தட்சிண கன்னடாவை சேர்ந்த ஒருவர் என 2 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக கொரோனா பாதித்தவர்களில் பெங்களூரு நகரில் 4 பேர், மண்டியாவில் 28 பேர், கலபுரகியில் ஒருவர், பெலகாவியில் ஒருவர், தாவணகெரேயில் 3 பேர், சிக்பள்ளாப்பூரில் 26 பேர், யாதகிரியில் 72 பேர், ஹாசனில் 4 பேர், பீதரில் 3 பேர், உத்தர கன்னடாவில் 2 பேர், ராய்ச்சூரில் 40 பேர், தட்சிண கன்னடாவில் 3 பேர், உடுப்பியில் 3 பேர், தார்வாரில் 5 பேர், கதக்கில் 15 பேர், பல்லாரியில் 3 பேர், கோலாரில் 3 பேர் உள்ளனர்.

கர்நாடகத்தில் இதுவரை 1 லட்சத்து 96 ஆயிரத்து 196 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 9 ஆயிரத்து 670 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக ஒரே நாளில் 216 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 192 பேர் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மராட்டிய மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கர்நாடகத்திற்கு வந்துள்ளதால், அடுத்து வரும் நாட்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு வேகம் எடுக்க தொடங்கியுள்ளதால், மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Next Story