யார்-யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? சுகாதாரத்துறை புதிய உத்தரவு


யார்-யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? சுகாதாரத்துறை புதிய உத்தரவு
x
தினத்தந்தி 23 May 2020 11:00 PM GMT (Updated: 23 May 2020 10:20 PM GMT)

கர்நாடகத்தில் யார்-யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்பது குறித்து சுகாதாரத்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா அறிகுறிகள் அதாவது காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள், கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இப்போது அந்த உத்தரவில் சுகாதாரத்துறை மாற்றம் செய்துள்ளது. இதுகுறித்து புதிய உத்தரவு ஒன்றை சுகாதாரத்துறை பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 14 நாட்களில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், மூச்சுத்திணறல் பிரச்சினை உள்ளவர்கள், கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள், 2-வது தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பு 14 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும். அறிகுறி உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். அறிகுறி உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.

லேசான அறிகுறியுடன் எச்.ஐ.வி., காசநோய், புற்றுநோய், பக்கவாதம், ரத்த சுத்திகரிப்பு செய்பவர்கள், உடல் உறுப்பு மாற்றம் செய்தவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு உடனே கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா அறிகுறியுடன் இறந்தவர்களின் உடலில் இருந்து 6 மணி நேரத்திற்குள் சளி மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story