ரஷியாவில் இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி தொடங்கியது


ரஷியாவில் இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி தொடங்கியது
x
தினத்தந்தி 23 May 2020 11:30 PM GMT (Updated: 23 May 2020 10:29 PM GMT)

ரஷியாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த இந்திய விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மீண்டும் தொடங்கியது.

பெங்களூரு,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2022-ம் ஆண்டு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டு ஆவதையொட்டி இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்தில் இந்திய விமானப்படையை சேர்ந்த 4 விமானிகள், ரஷியாவில் விண்வெளி பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் பயிற்சி நிறுத்தப்பட்டது. இப்போது விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி ரஷியாவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷிய விண்வெளி கழகமான ரஷ்காஸ்மாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

“ரஷிய விண்வெளி கழகத்தின் நிறுவனமான கிளவ்காஸ்மாஸ் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் மனித விண்வெளி மையம் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேருக்கு ககரின் ஆராச்சி மற்றும் சோதனை விண்வெளி வீரர்கள் பயிற்சி மையத்தில்(ஜி.சி.டி.சி.) கடந்த 12-ந் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த 4 வீரர்களும் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்கள்.

கொரோனா பரவுவதை தடுக்க பயிற்சி மையத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. தனிமனித விலகலும் கடைப்பிடிக்கப்படுகிறது. உரியவர்களை தவிர வேறு யாரும் அந்த பயிற்சி மையத்திற்குள் அனுமதிக்கப்படுவது இல்லை. அந்த பயிற்சி மையத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் மருத்துவ முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அந்த வீரர்களுக்கு இந்த வாரம் விண்வெளி, விண்வெளி ஓடத்தை இயக்குவதற்காக ரஷிய மொழி பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது.”

இவ்வாறு ரஷ்காஸ்மாஸ் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிறுவனம் தனது டுவிட்டரில், இந்திய விண்வெளி வீரர்கள் தேசிய கொடியுடன் கூடிய முகக்கவசம் அணிந்து பயிற்சி பெறுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

Next Story