அபராத தொகையை ரத்து செய்யக்கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய டாஸ்மாக் ஊழியர்கள்


அபராத தொகையை ரத்து செய்யக்கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய டாஸ்மாக் ஊழியர்கள்
x
தினத்தந்தி 24 May 2020 12:00 AM GMT (Updated: 24 May 2020 12:00 AM GMT)

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.

திண்டுக்கல், 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து மார்ச் மாத இருப்பு தொகையில் வித்தியாசம் இருப்பதாக கூறியதால், 2 சதவீத அபராத தொகை மற்றும் ஜி.எஸ்.டி. சேர்த்து விற்பனையாளர்கள் செலுத்தினர். '

இதற்கிடையே 50 சதவீதம் அபராத தொகை செலுத்தும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும், மது விற்பனை தொகையை வங்கிகள் மூலம் நேரடியாக வசூலிக்க வேண்டும். திருட்டு போன மதுபானத்துக்கான தொகையை காப்பீடு மூலம் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி திண்டுக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில், மாநில துணைத்தலைவர் கண்ணையன், மாவட்ட செயலாளர் சிவஜோதி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் டாஸ்மாக் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால், ஊரடங்கு காரணமாக போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.

Next Story