ஊரடங்கு விதிமுறை தளர்வு: ஈரோட்டில் ஆட்டோக்கள் ஓடின


ஊரடங்கு விதிமுறை தளர்வு: ஈரோட்டில் ஆட்டோக்கள் ஓடின
x

ஊரடங்கு விதிமுறை தளர்வு காரணமாக ஈரோட்டில் ஆட்டோக்கள் ஓடத்தொடங்கின.

ஈரோடு, 

ஊரடங்கு விதிமுறை தளர்வு காரணமாக ஈரோட்டில் ஆட்டோக்கள் ஓடத்தொடங்கின.

ஆட்டோக்கள் ஓடின

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 18-ந் தேதி முதல் ஊரடங்கு பெரும் அளவு தளர்த்தப்பட்டு இருக்கிறது. எனவே வாகனங்கள் ஓடத்தொடங்கின. கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. சாலைகளில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. ஏற்கனவே கால் டாக்சிகள் ஓடத்தொடங்கிய நிலையில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி இல்லாமல் இருந்தது. அதற்கும் விலக்கு அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். அதைத்தொடர்ந்து நேற்று முதல் ஆட்டோக்கள் ஓடின. அரசு அறிவிப்பின் படி டிரைவர் மற்றும் ஒருவர் மட்டுமே பயணம் செய்தனர்.

இதுகுறித்து ஆட்டோ டிரைவர் ஒருவர் கூறும்போது, ‘சுமார் 60 நாட்களுக்கு பிறகு ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்த இடைப்பட்ட நாட்களில் ஆட்டோ டிரைவர்கள், உரிமையாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்பு அடைந்து விட்டது. தற்போது எங்கள் அன்றாட வேலைக்கு வந்து விட்டோம். ஆனால் ஒருவரை மட்டுமே ஏற்றிச்செல்ல அனுமதி கிடைத்து இருக்கிறது.

தளர்வு

சென்னை போன்ற பெரு நகரங்களில் ஆட்டோக்களில் பயணிகள் ஷேர் செய்து ஏறுவது வழக்கம். ஆனால் ஈரோடு போன்ற நகரங்களில் ஆட்டோக்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம் பயணம் செய்வார்கள். எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட ஒரே குடும்பத்தினர் பயணம் செய்வது என்றால் ஆட்டோக்களில் செல்வதை விரும்புவார்கள்.

தற்போது ஒருவர் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலையில் கார்களைத்தான் விரும்புவார்கள். மேலும், தற்போது வெளி மாநில, மாவட்ட மக்களில் வருகை இல்லாததால் உள்ளூர் மக்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டியது உள்ளது. எனவே ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற விதிமுறையில் சற்று தளர்வு தந்தால் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் தொழிலை நன்றாக செய்ய முடியும். இதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்’ என்றார்.

Next Story