குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க ஏதுவாக புதுப்பொலிவு பெறும் கல்லணை வர்ணம் பூசும் பணிகள் தீவிரம்


குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க ஏதுவாக புதுப்பொலிவு பெறும் கல்லணை வர்ணம் பூசும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 24 May 2020 3:01 AM GMT (Updated: 24 May 2020 3:01 AM GMT)

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க ஏதுவாக கல்லணையை புதுப்பொலிவு பெற செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருக்காட்டுப்பள்ளி,

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க ஏதுவாக கல்லணையை புதுப்பொலிவு பெற செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஜூன் 12-ந் தேதி திறப்பு

காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் பல ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணை வந்தடைந்ததும் அங்கிருந்து காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் வழியாக திறந்து விடப்படும். ஜூன் 12-ந் தேதி மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் அநேகமாக ஜூன் 16-ந் தேதி இரவில் கல்லணையை வந்தடைய கூடும் என்றும், 17-ந் தேதி காவிரி பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப் படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

4½ லட்சம் ஏக்கர்

காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி 4½ லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்னதாக கல்லணையில் உள்ள காவிரி, கொள்ளிடம், கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆற்றின் மதகுகள் சீரமைக்கப்பட்டு முறையாக ஏறி, இறங்குகிறதா? என்று சோதித்து பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் கல்லணையை புதுபொலிவாக மாற்றுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆற்று பாலங்களுக்கு புது வர்ணம் பூசும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

உற்சாகம்

மேலும் கல்லணையில் உள்ள கரிகாற்சோழன், காவிரிஅம்மன், ராஜராஜசோழன், குறுமுனி அகத்தியர், விவசாயி சிலைகளும் புதுப்பொலிவு பெறும் வகையில் வர்ணம் பூசப்பட உள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், கருப்பண்ணசாமி திருக்கோவில், பூங்காவில் உள்ள ஆதிவிநாயகர் கோவில் ஆகியவற்றுக்கும் வர்ணம் பூசப்பட உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின்னர் குறுவைக்கு குறித்த நாளில் தண்ணீர் திறக்கபட உள்ளதால் பணியாளர்கள் உற்சாகமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story