சேலத்தில் இருந்து வேலூர் வழியாக ஜார்கண்ட் மாநிலத்துக்கு சைக்கிளில் செல்ல முயன்ற தொழிலாளர்கள்


சேலத்தில் இருந்து வேலூர் வழியாக ஜார்கண்ட் மாநிலத்துக்கு சைக்கிளில் செல்ல முயன்ற தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 24 May 2020 3:48 AM GMT (Updated: 24 May 2020 3:48 AM GMT)

சேலத்தில் பணிபுரிந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 8 தொழிலாளர்கள் சைக்கிளில் சொந்த ஊருக்கு செல்வதற்காக வேலூர் வழியாக வந்தனர்.

வேலூர், 

சேலத்தில் பணிபுரிந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 8 தொழிலாளர்கள் சைக்கிளில் சொந்த ஊருக்கு செல்வதற்காக வேலூர் வழியாக வந்தனர். அவர்களை தமிழக-ஆந்திர மாநில எல்லையில் போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர்.

ஊரடங்கால் சிக்கி தவிப்பு

கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ரெயில், பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் தொழில், படிப்பு, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக பிற மாநிலங்களுக்கு சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.

அவர்களை சொந்த ஊருக்கு சிறப்பு ரெயில், பஸ் மூலம் அனுப்பும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. ஆனாலும் பல மாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் நடைபயணமாக செல்கிறார்கள்.

சைக்கிளில் செல்ல முயன்ற 8 பேர்

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிலர் சேலம் மாவட்டத்தில் கட்டிட வேலை செய்து வந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக பல நாட்களாக வேலையில்லாமல் தவித்த அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். சொந்த ஊருக்கு அனுப்பி வைக்காததால் விரக்தி அடைந்த 8 பேர் சைக்கிளில் ஜார்கண்ட் மாநிலம் செல்ல முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர்கள் சேலத்தில் இருந்து புறப்பட்டு உள்ளனர். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழியாக 8 பேரும் நேற்று காலை வேலூர் மாவட்டத்துக்கு வந்தனர். பின்னர் காட்பாடி வழியாக சென்று தமிழக-ஆந்திர மாநில எல்லையை கடக்க முயன்றனர்.

அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆந்திர மாநில போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதுகுறித்து அவர்கள் தமிழக போலீசாரிடம் தெரிவித்தனர். அதற்கு போலீசார், “தமிழகத்தில் தங்கி பணிபுரிந்த வடமாநிலத்தவர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். எனவே நீங்கள் சொந்த ஊருக்கு சைக்கிளில் செல்வதை கைவிட்டு விட்டு, சிறப்பு ரெயில் மூலம் செல்ல வேண்டும்” என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் சேலம் மாவட்டத்துக்கு மீண்டும் செல்வதாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

Next Story