திருப்பூரில் தொப்புள்கொடியுடன் புதரில் வீசப்பட்ட குழந்தை மீட்பு கல்நெஞ்சம் படைத்த தாயை போலீஸ் தேடுகிறது


திருப்பூரில் தொப்புள்கொடியுடன் புதரில் வீசப்பட்ட குழந்தை மீட்பு கல்நெஞ்சம் படைத்த தாயை போலீஸ் தேடுகிறது
x
தினத்தந்தி 24 May 2020 4:42 AM GMT (Updated: 24 May 2020 4:42 AM GMT)

திருப்பூரில் பிறந்து சிலமணி நேரமே ஆன தொப்புள்கொடியுடன் புதரில் வீசப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது. இது தொடர்பாக கல்நெஞ்சம் படைத்த தாயை போலீசார் தேடி வருகிறார்கள்.

அனுப்பர்பாளையம், 

திருப்பூரில் பிறந்து சிலமணி நேரமே ஆன தொப்புள்கொடியுடன் புதரில் வீசப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது. இது தொடர்பாக கல்நெஞ்சம் படைத்த தாயை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதரில் கிடந்த குழந்தை

மனித உறவுகள் மறத்துப்போன காலம் இது. அணைக்கும் கரங்களே அறுக்கும் கலிகாலம் அல்லவா. உலகில் கோடான கோடி உறவுகள் இருந்தாலும், தாயின் உறவுக்கு ஈடுஇணை எதுவும் இல்லை. ஆனால் சமீப காலமாக நடக்கும் நிகழ்வுகள் மனதை பதைபதைக்க வைக்கிறது. ஒரு சிலர் குழந்தைக்காக தவமாய் தவமிருக்கும் நிலையில், பெற்றெடுத்த குழந்தையை தொப்புள் கொடியை அறுக்காமல் புதரில் வீசிச்சென்று உள்ளார் ஒரு பெண். குப்பை தொட்டிகளில் குப்பைகள் குவிகிறதோ இல்லையோ ஆனால் குப்பை தொட்டிகளிலும், புதர்களிலும் கேட்கும் குழந்தைகளின்அழுகுரல் ஈரம் கொண்டோரை இளக வைக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு:-

திருப்பூர்-அவினாசி ரோடு பெரியார் காலனியை அடுத்த டி.டி.பி.மில் ரோடு பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே உள்ள புதரில் நேற்று காலை குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஒரு அழகான பச்சிளம் பெண் குழந்தை அங்கு பசியால் அழுது துடித்து கொண்டிருந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பொதுமக்கள் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்து அந்த பெண் குழந்தையை பத்திரமாக மீட்டு, அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அந்த குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடி அறுக்கப்படாமல் தூக்கி வீசப்பட்டது தெரிய வந்தது. பின்னர் சைல்டுலைன் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு சென்ற சைல்டுலைன் அமைப்பினர் அந்த குழந்தையை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நல்ல சுகமுடன் அந்த பெண்சிசு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். குழந்தையின் அழுகுரல் கேட்டதும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சென்று பார்த்தால் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. காலதாமதம் ஏற்பட்டு இருந்தால் கொடூரம் அரங்கேறி இருக்கும். காரணம் அந்த பகுதியில் கூட்டம் கூட்டமாக வெறிநாய்கள் சுற்றித்திரிகின்றன.

எனவே வெறிநாய் கண்ணில்படும் முன்பு, அந்த பகுதியில் உள்ளவர்கள் கண்ணில் குழந்தை பட்டதால் உயிர் பிழைத்தது.

திருப்பூரில் பிறந்த உடனே குழந்தையை புதரில் தூக்கி வீசி எறிந்த கல்நெஞ்ச தாய் யார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் கல்நெஞ்சம் படைத்த தாயை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story