செய்யாறில் அ.தி.மு.க. ஆட்சியின் 5-ம் ஆண்டு தொடக்க விழா


செய்யாறில் அ.தி.மு.க. ஆட்சியின் 5-ம் ஆண்டு தொடக்க விழா
x
தினத்தந்தி 24 May 2020 11:15 PM GMT (Updated: 24 May 2020 8:52 PM GMT)

செய்யாறில் அ.தி.மு.க. ஆட்சியின் 5-ம் ஆண்டு தொடக்க விழா தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது

செய்யாறு, 

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு அ.தி.மு.க மகத்தான வெற்றிபெற்று, ஆட்சி பொறுப்பேற்றது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் மக்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறது.

அதன்படி அ.தி.மு.க. ஆட்சியின் 5-ம் ஆண்டு தொடக்க விழா திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் ஆரணி கூட்ரோடு பகுதியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.கவினர் கொண்டாடினர். ஆரணி கூட்ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். அதைத்தொடர்ந்து கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.

விழாவில் அ.தி.மு.க நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. குணசீலன், எஸ்.ரவிச்சந்திரன், எம்.மகேந்திரன், பி.லோகநாதன், கே.வெங்கிடேசன், ஏ.ஜனார்த்தனம், டி.பி.துரை, அரங்கநாதன், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story