நாந்தெட்டில் சாமியார் உள்பட 2 பேரை கொலை செய்து கொள்ளை; ஒருவர் கைது


நாந்தெட்டில் சாமியார் உள்பட 2 பேரை கொலை செய்து கொள்ளை; ஒருவர் கைது
x
தினத்தந்தி 24 May 2020 11:18 PM GMT (Updated: 24 May 2020 11:18 PM GMT)

நாந்தெட்டில் சாமியார் உள்பட 2 பேரை கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

நாந்தெட் மாவட்டம் நாகதானா பகுதி சின்சாலா கிராமத்தில் உள்ள ஆசிரமத்தில் ருத்ரபிரதாப் மகாராஜ் (வயது33) என்ற சாமியார் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 4 மணியளவில் ஆசிரம வாசல் பகுதியில் காரில் சாமியார் பிணமாக கிடந்தார். இதேபோல ஆசிரமத்தின் அருகில் அதே பகுதியை சேர்ந்த பகவான் ஷிண்டே (50) என்பவரும் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இதுகுறித்து கிராமத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நடந்த விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த சாய்னாத் லிங்கடே என்பவர் சாமியார், மற்றொரு நபரை கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

சம்பவத்தன்று அதிகாலை கொள்ளை அடிக்கும் நோக்கத்துடன் சாய்னாத் லிங்கடே ஆசிரமம் நோக்கி வந்துள்ளார். அப்போது ஆசிரமத்தின் அருகில் பகவான் ஷிண்டேயை அவர் பார்த்துள்ளார். எனவே அவர் முதலில் பகவான் ஷிண்டேயை கொலை ெசய்து அவரை உடலை அந்த பகுதியில் உள்ள பள்ளி கழிவறையில் போட்டு உள்ளார். பின்னர் ஆசிரமத்துக்குள் நுழைந்து சாமியாைர கொலை செய்து அங்கு இருந்த பணம், பொருட்களை கொள்ளையடித்து உள்ளார். பின்னர் சாமியாரின் உடலுடன் அங்கு இருந்து காரில் தப்பி செல்ல முயன்ற போது ஆசிரம வாசலில் மோதினார். சத்தம் கேட்டு கிராமத்தினர் வந்தவுடன் சாய்னாத் லிங்கடே மோட்டார் சைக்கிளில் அங்கு இருந்து தப்பி ஓடிஉள்ளார்.

இந்தநிலையில் போலீசார் மராட்டியம்- தெலுங்கானா மாநில எல்லையில் சாய்னாத் லிங்கடேயை கைது செய்தனர். அவர் சாமியாரிடம் இருந்து ரூ.70 ஆயிரம், மடிக்கணினியை கொள்ளை அடித்து இருப்பதாகவும், அவர் மீது கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் கூறினர்.

இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட சாமியாரின் மறைவுக்கு சட்டசபை எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யவும் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.


Next Story