வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்து வந்த போது கொரோனா பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதாக விமானி வழக்கு ஏர் இந்தியா பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்து வந்த போது கொரோனா பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதாக விமானி வழக்கு ஏர் இந்தியா பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 May 2020 11:45 PM GMT (Updated: 24 May 2020 11:32 PM GMT)

வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்து வந்த போது கொரோனா பாதிப்பு விதிகள் மீறப்பட்டதாக விமானி தொடர்ந்த வழக்கில், ஏர் இந்தியா மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

கொரோனா பாதித்த வெளிநாடுகளில் தவித்த இந்தியர்கள் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களை அழைத்து வரும் போது கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏர் இந்தியா நிறுவனம் பின்பற்றவில்லை என விமானி தேவன் கனானி என்பவர் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக மார்ச் 23-ந் தேதி மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையின்படி விமானத்தில் நடுவில் உள்ள இருக்கையை காலியாக வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை பின்பற்றப்படவில்லை என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக சான்பிரான்சிஸ்கோ- மும்பை இடையே இயக்கப்பட்ட விமானத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் சமர்ப்பித்து இருந்தார்.

அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.டி.தனுகா, அபய் அகுஜா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அப்போது ஏர் இந்தியா சார்பில் ஆஜரான வக்கீல் அபினவ் சந்திரசூட், மார்ச் 23-ந் தேதி வெளியிட்ட சுற்றறிக்கை பிறகு இந்த மாதம் 22-ந் தேதி புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த புதிய சுற்றறிக்கையில் நடுத்தர இருக்கையை காலியாக வைக்க வேண்டும் என கூறவில்லை என தெரிவித்தார். வெளிநாட்டுவாழ் இந்தியர்களை விமானத்தில் அழைத்து வரும் போது தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

இதன்பின்னர் நீதிபதிகள் கூறுகையில், இந்த மாதம் 22-ந் தேதியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் உள்நாட்டு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும். சர்வதேச நடவடிக்கைகளுக்கு அல்ல என்பதை காட்டுகிறது என்றனர்.

இது தொடர்பாக ஏர் இந்தியா மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அந்த மனு மீதான விசாரணை அடுத்த மாதம் (ஜூன்) 2-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். மத்திய அரசின் புதிய சுற்றறிக்கைக்கு எதிராக விமானி தேவன் கனானி திருத்தம் செய்யவும் ஐகோர்ட்டு அனுமதித்தது.

Next Story