சிவப்பு மண்டலத்தில் உள்ள விமான நிலையங்களை மீண்டும் திறப்பது சரியல்ல மராட்டிய மந்திரி ஆதங்கம்


சிவப்பு மண்டலத்தில் உள்ள விமான நிலையங்களை மீண்டும் திறப்பது சரியல்ல மராட்டிய மந்திரி ஆதங்கம்
x
தினத்தந்தி 24 May 2020 11:36 PM GMT (Updated: 24 May 2020 11:36 PM GMT)

சிவப்பு மண்டலத்தில் உள்ள விமான நிலையங்களை மீண்டும் திறப்பது சரியல்ல என்று மராட்டிய மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்தார்.

மும்பை,

நாடு முழுவதும் 4-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. ஊரடங்கு காரணமாக முடக்கப்பட்ட முதல் உள்நாட்டு விமான சேவை இன்று (திங்கட்கிழமை) தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி அறிவித்தார்.

ஆனால் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் ஊரடங்கு முடியும் வரை விமான போக்குவரத்தை அனுமதிக்க முடியாது என மாநில அரசு தெரிவித்து இருந்தது.

இது தொடர்பாக நேற்று மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியதாவது:-

சிவப்பு மண்டலத்தில் விமான நிலையங்களை மீண்டும் திறப்பது மிகவும் தவறான யோசனை. விமான நிலையங்களில் உடல் வெப்ப பரிசோதனை செய்தால் மட்டும் போதுமானதாக இருக்காது. தற்போதைய சூழ்நிலையில் ஆட்டோக்கள், டாக்சிகள், பஸ்கள் இயக்குவது என்பது சாத்தியமற்றது.

பசுமை மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலத்திற்கு வரும் பயணிகளுக்கு அது ஆபத்தை ஏற்படுத்தி விடும். அதுபோல சிவப்பு மண்டல பகுதிக்குள்ளும் கொரோனா நோய் தாக்கத்தை அதிகரிக்கும். விமான நிலையத்தை பரபரப்பாக வைத்திருப்பது என்பது ஆபத்தானது தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாட்டில் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை விமான நிலையம் மற்றும் புனே விமான நிலையம் சிவப்பு மண்டலத்தின் கீழ் வருகிறது. அதன் அடிப்படையில் மந்திரி அனில் தேஷ்முக் இந்த ஆதங்கத்தை தெரிவித்து உள்ளார்.


Next Story