மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் 1,700 தமிழர்கள் புறப்பட்டு சென்றனர்


மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் 1,700 தமிழர்கள் புறப்பட்டு சென்றனர்
x
தினத்தந்தி 25 May 2020 12:00 AM GMT (Updated: 24 May 2020 11:39 PM GMT)

மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் 1,700 தமிழர்கள் புறப்பட்டு சென்றனர்

மும்பை,

மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரெயிலில் 1,700 தமிழர்கள் சென்றனர்.

மும்பையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆயிரக்கணக்கான தமிழக தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். மும்பை - தமிழகம் இடையே சிறப்பு ரெயில் எதுவும் இயக்கப்படாததால் இங்கு சிக்கிய தமிழக தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். குறிப்பாக மாகிம் ரெயில் நிலையம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட விழுப்புரத்தை சேர்ந்த தொழிலாளர்களுடன் திறந்தவெளியில் அமைக்கப்பட்ட கூடாரங்களில் குடும்பத்துடன் பரிதவித்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மும்பை சி.எஸ்.எம்.டி. - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த ரெயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதில் செல்ல இருந்த தமிழர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் மும்பை லோக்மான்யா திலக் டெர்மினசில்(எல்.டி.டி.) இருந்து நாகர்கோவிலுக்கு மற்றொரு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் இன்று (திங்கட்கிழமை) மதியம் 12 மணியளவில் நாகர்கோவில் சென்றடைகிறது. சிறப்பு ரெயிலில் விழுப்புரம், மதுரை, நெல்லை, நாகர்கோவில் பகுதிகளை சேர்ந்த சுமார் 1,700 தொழிலாளர்கள் சென்றனர்.

இந்த தொழிலாளர்கள் மும்பை ஆரேகாலனி, கோரேகாவ், மலாடு, அந்தேரி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வந்தவர்கள் ஆவர். இதேபோல மாகிம் ரெயில் நிலையப்பகுதியில் தவித்து வந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களும் குடும்பத்தினருடன் சிறப்பு ரெயிலில் சென்றனர்.

முன்னதாக ரெயிலில் பயணம் செய்த தொழிலாளர்களை மும்பை பா.ஜனதா தமிழ் பிரிவு தலைவர் ராஜா உடையார், மும்பை கிங்மேக்கர் காமராஜர் தமிழ் டிரஸ்ட் நிறுவனர் எம்.சி.கே.பொன்ராஜ், காங்கிரஸ் பிரமுகர் கோபால்ராஜ் உள்ளிட்ட பலர் வழிஅனுப்பி வைத்தனர். இதேபோல சிறப்பு ரெயிலை இயக்க உதவி செய்த கேப்டன் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ.வுக்கும் சொந்த ஊர் புறப்பட்ட தொழிலாளர்கள் நன்றி கூறினர்.

Next Story