தர்மபுரிக்கு வந்த பானிபூரி வியாபாரிக்கு கொரோனா தொற்று


தர்மபுரிக்கு வந்த பானிபூரி வியாபாரிக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 25 May 2020 1:13 AM GMT (Updated: 25 May 2020 1:13 AM GMT)

சென்னையில் இருந்து தர்மபுரிக்கு வந்த பானிபூரி வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டத்தில் பெண் போலீஸ் உள்பட 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சை பெற்றனர். இவர்கள் அனைவரும் குணமாகி விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வருபவர்கள் மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பானிபூரி வியாபாரி சென்னை பெரம்பூரில் உள்ள தங்கை வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் கடந்த 21-ந்தேதி பையர்நத்தத்திற்கு வந்தார். இதுகுறித்து கிராமமக்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அந்த நபரை தர்மபுரி செட்டிக்கரையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை.

இதனிடையே நேற்று அந்த நபருக்கு பையர்நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சளி, ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதன்முடிவில் அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அரூர் உதவி கலெக்டர் பிரதாப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர், சுகாதாரத்துறை அலுவலர்களுடன் பையர்நத்தம் கிராமத்திற்கு சென்று அந்த நபரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்த கிராமத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அந்த நபரின் வீடு மற்றும் அருகில் உள்ள வீடுகளில் வசித்து வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Next Story