திண்டுக்கல்லில் இருந்து சிறப்பு ரெயிலில் ஜார்கண்ட் மாநிலத்துக்கு செல்லும் 538 தொழிலாளர்கள்


திண்டுக்கல்லில் இருந்து சிறப்பு ரெயிலில்   ஜார்கண்ட் மாநிலத்துக்கு செல்லும் 538 தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 25 May 2020 1:51 AM GMT (Updated: 25 May 2020 1:51 AM GMT)

திண்டுக்கல்லில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் ஜார்கண்ட் மாநிலத்துக்கு 538 தொழிலாளர்கள் இன்று செல்கின்றனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நூற்பாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். பீகார், ஒடிசா, ஜார்கண்ட், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை செய்வது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கால் வேலையிழந்த அவர்கள் சொந்த மாநிலத்துக்கு ரெயில், பஸ்கள் மூலம் திரும்பி சென்ற வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இதுவரை மராட்டியம், பீகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 1,700 பேர் சென்றுள்ளனர். மேலும் பலர் சொந்த ஊருக்கு செல்வதற்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று பீகாரை சேர்ந்த 74 பேர் சொந்த ஊருக்கு ரெயிலில் சென்றனர்.

538 பேர்

இதற்காக அவர்கள் திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மதுரை-பீகார் சிறப்பு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 538 பேர் சொந்த ஊருக்கு செல்வதற்கு விண்ணப்பித்து இருந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள், இன்று (திங்கட்கிழமை) சொந்த ஊருக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இன்று மாலை மதுரையில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அந்த ரெயில் மாலை 5 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வருகிறது. அதில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 538 பேரும் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதையொட்டி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.

Next Story