முன் விரோதத்தில் இரும்புக் கம்பியால் அடித்து வாலிபர் கொலை


முன் விரோதத்தில் இரும்புக் கம்பியால் அடித்து வாலிபர் கொலை
x
தினத்தந்தி 25 May 2020 2:49 AM GMT (Updated: 25 May 2020 2:49 AM GMT)

மதுரையில் முன் விரோதத்தில் இரும்புக்கம்பியால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, 

மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மினி வேனில் வந்த கும்பல் கொலை செய்ததாக தகவல் பரவியது. உடனே சம்பவ இடத்திற்கு அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

விசாரணையில், இறந்தவர் திருப்பரங்குன்றம் காமராஜர் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 26) என்பதும், இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.

போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த சுப்பிரமணியின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது சுப்பிரமணியின் உடலில் சில இடங்களில் இரும்பு கம்பியால் தாக்கிய காயம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

மேலும் விசாரணையில், மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதியதில் சுப்பிரமணி கீழே விழுந்ததும், அப்போது ஜீப்பில் வந்த கும்பல் அவரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்ததும் தெரிய வந்தது.

முன் விரோதம்

அதில் இறந்த சுப்பிரமணிக்கும், அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து தனது கூட்டாளிகள் ரவி, தங்கபாண்டி உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து மோட்டார்சைக்கிளில் சென்ற சுப்பிரமணியை பின்தொடர்ந்து சென்று அவரை இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மாரிமுத்து உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.

Next Story