ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்; வீடுகளிலேயே முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்; வீடுகளிலேயே முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 26 May 2020 1:32 AM GMT (Updated: 26 May 2020 1:32 AM GMT)

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

தர்மபுரி,

ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை நேற்று முஸ்லிம்களால் கொண்டாடப்பட்டது. புனித ரமலான் மாதத்தில் ஒரு மாதம் நோன்பு இருந்து இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், வேப்பனப்பள்ளி, ராயக்கோட்டை, ஜெகதேவி, மத்தூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, ஓசூர், அஞ்செட்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முஸ்லிம் மக்கள் புத்தாடை அணிந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஈத்கா மைதானங்களில் சிறப்பு தொழுகை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக அத்தகைய சிறப்பு தொழுகைகள் நடைபெறவில்லை. இதனால் முஸ்லிம்கள் வீடுகளிலேயே சமூக இடைவெளியை கடைபிடித்து சிறப்பு தொழுகை நடத்தினார்கள். பின்னர் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை கூறிக் கொண்டனர். மேலும் வீடுகளில் பிரியாணி சமைத்து, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விருந்து அளித்து மகிழ்ந்தனர்.

இதேபோன்று தர்மபுரி மாவட்டத்திலும் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. ஊரடங்கையொட்டி பொது இடங்கள், மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக முஸ்லிம்கள் வீடுகளிலேயே குடும்பத்தினருடன் தொழுகையை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சிறப்பு தொழுகை நடத்தினர்.

தர்மபுரி மாவட்ட முத்தவல்லி சங்க தலைவர் ஜப்பார் தலைமையில் அவருடைய வீட்டில் குடும்பத்தினர், உறவினர்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். இதேபோன்று பாலக்கோடு, அரூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், பென்னாகரம், தென்கரைக்கோட்டை, மொரப்பூர், கம்பைநல்லூர், தொப்பூர், மாரண்டஅள்ளி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம்கள் அவரவர் வீடுகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகையை நடத்தினார்கள்.

Next Story