நரிப்பள்ளி அணைக்கட்டில் ரூ.94 லட்சத்தில் குடிமராமத்து பணி


நரிப்பள்ளி அணைக்கட்டில் ரூ.94 லட்சத்தில் குடிமராமத்து பணி
x
தினத்தந்தி 26 May 2020 1:43 AM GMT (Updated: 26 May 2020 1:43 AM GMT)

நரிப்பள்ளி அணைக்கட்டில் ரூ.94 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

அரூர்,

அரூர் தாலுகா வெங்கடராமபுரம் கிராமத்தில் கல்லாற்றின் குறுக்கே உள்ள நரிப்பள்ளி அணைக்கட்டில் ரூ.94 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சம்பத்குமார், கோவிந்தசாமி, உதவி கலெக்டர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து குடிமராமத்து பணியை தொடங்கி வைத்தார்.

இந்த பணிகளை விரைவாக முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், ஒன்றியக்குழு தலைவர் பொன்மலர் பசுபதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வள்ளுவன், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், தாசில்தார் செல்வக்குமார், மாவட்ட அரசு வக்கீல் பசுபதி, ஆயக்கட்டு தலைவர் முருகன், ஊராட்சி தலைவர் மல்லிகா அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கடகத்தூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் உணவு வசதியுடன் கூடிய தங்கும் விடுதி கட்டிட கட்டுமான பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த கட்டிட பணியை ஒரு ஆண்டிற்குள் முடித்து மாணவ-மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மலர்விழி, மாவட்ட பால் வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ரவி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவப்பிரகாசம், கூட்டுறவு சங்க தலைவர்கள் மதிவாணன், வாசுகி சிற்றரசு, தர்மபுரி தாசில்தார் ரேவதி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெயசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story